Published : 05 Dec 2016 09:03 AM
Last Updated : 05 Dec 2016 09:03 AM
மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. இச்சூழலில், வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் இந்த ஏரிகளின் பெரும்பகுதி வறண்டு காணப்பட்டது. இதனால், பூண்டி உள்ளிட்ட 4 ஏரிகளின் நீர் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்தன.
அதேநேரத்தில் ஆந்திர அரசு, சென்னை குடிநீர் தேவைக்காக தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி கடந்த அக்டோபர் மாதம் முதல் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீரை திறந்து விடப்பட்டுள்ளது. இடையில் நிறுத்தப்பட்ட அந்த நீர், கண்டலேறு அணையிலிருந்து விநாடிக்கு 1,700 கனஅடி என்ற கணக்கில் திறந்து விடப்பட்டு, தற்போது தடங்கலின்றி பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 464.74 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. இதனால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பூண்டி ஏரியில் மட்டும் குறைந்த அளவிலான நீர் இருந்து வருகிறது.
இந்நிலையில், தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி, பிறகு கரையை கடந்ததன் விளைவாக கடந்த 1-ம் தேதி அதிகாலை முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. லேசான மற்றும் மிதமான மழையாக மாறி மாறி பெய்து வருவதால் குடிநீர் தரும் முக்கிய ஏரிகளுக்கு நீர்வரத் தொடங்கியுள்ளது. இதனால் புழல் உள்ளிட்ட 4 ஏரிகளிலும் நீர் இருப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதன்படி 11,057 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரிகளில் கடந்த மாதம் 30-ம் தேதி 745 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி அது 1,008 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. இந்த அளவு இன்னும் படிப்படியாக உயர வாய்ப்புள்ளது என பொதுப்பணித் துறை அதிகா ரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் சென்னையை அச் சுறுத்தி வந்த குடிநீர் தட்டுப்பாடு அபாயம் தற்காலிகமாக நீங்கி யுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT