Published : 22 Nov 2022 02:20 PM
Last Updated : 22 Nov 2022 02:20 PM

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகள் உதவிப் பேராசிரியர்கள் நியமன விவகாரம்: தனி நீதிபதி உத்தரவு நிறுத்திவைப்பு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளுக்கு சொந்தமான உதவி பேராசிரியர்கள் பணி நியமனம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான பல்வேறு கல்லூரிகளில் 2013 முதல் 2015-ம் ஆண்டுகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதால், அதுகுறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கல்லூரிகளில் 254 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, அவர்களின் நியமனத்தை செல்லாது என அறிவித்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுக்கு எதிராக உதவி பேராசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "எங்கள் தரப்பு வாதத்தை கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இயற்கை நீதிக்கு எதிரானது. நாங்கள் போதுமான தகுதியை பெறவில்லை எனக்கூறுவது தவறு. பல்கலைக்கழகமும், அரசும் எங்களது தேர்வு முறையை ஏற்றுக்கொண்டுள்ளது" என வாதிட்டனர்.

அப்போது பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "152 உதவி பேராசிரியர்கள் போதுமான கல்வித் தகுதியை பெற்றிருக்கவில்லை" என்று கூறினார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், "நீதிமன்றம் உத்தரவிட்டதால் உதவி பேராசிரியர்களின் கல்வி தகுதியை ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் நடத்திய விசாரணையில் 150 உதவி பேராசிரியர்களின் வெயிடேஜ் மதிப்பெண்களில் மட்டுமே தவறு நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே, உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக உறுதியாகாத நிலையில் 254 உதவி பேராசியர்களின் பணி நியமனத்தை ஒட்டு மொத்தமாக ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு நிலைக்கத்தக்கல்ல எனக்கூறி வழக்கின் இறுதி விசாரணை முடியும் வரை தனி நீதிபதியின் உத்ததரவு நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x