Published : 22 Nov 2022 01:21 PM
Last Updated : 22 Nov 2022 01:21 PM

மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளைப் பெற வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொசு வலைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் பொது சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொசுவலை மற்றும் போர்வைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சென்னை மாநகராட்சியில் 3 லட்சம் கொசுவலைகள் நீர்நிலைகளில் ஓரங்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் சைதாப்பேட்டையில் 23 ஆயிரம் பேருக்கு கொசு வலைகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மருத்துவர்களின் ஆலோசனை, பரிந்துரைகளின் அடிப்படையில் மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டும். கள்ளக்குறிச்சியில் கர்ப்பிணி பெண் கருகலைப்புக்கான மருந்தினை உட்கொண்டதால் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மருந்தகங்களில் மருந்து சீட்டு இல்லாமல் சில மருந்துகளை வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ கவுன்சிலில் தேர்தலில் 1.5 லட்சம் மருத்துவர்கள் வாக்களிக்க தகுதியான மருத்துவர்களாக உள்ளனர். மாவட்ட கவுன்சிலில் 10 பேர் உறுப்பினர்கள், அதில் 3 பேரை அரசு தேர்ந்தெடுக்கும், 7 பேர் தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன் பின் தலைவர், துணை தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும். மருத்துவ கவுன்சிலுக்கு இன்று நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அதில் பதிவாளர் பதவி குறித்து விளக்கம் கேட்கப்பட உள்ளது. நீதிமன்றத்திலும் மருத்துவர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விதிமுறைகளின் படி மருத்துவ கவுன்சில் தேர்தல் நடத்தப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் கோரிக்கை. புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு 6 மருத்துவக் கல்லூரி மற்றும் தமிழ் வழி மருத்துவக் கல்லூரி என 7 மருத்துவக் கல்லூரி வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடப்படும்" இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x