சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. தனி அலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்
Updated on
1 min read

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனி அலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள் போலீஸார் வைத்திருந்த தடுப்பு கட்டைகளை தள்ளிவிட்டு தடையை மீறி பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனி அலுவலர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்கள் சுமார் 700 பேர் பணியாற்றி வருகின்றனர். பல்கலைக்கழக நிர்வாகம் இவர்களை உதவி பிரிவு அலுவலர்கள் என்ற பெயரில் பதவி இறக்கம் செய்து சம்பளத்தை குறைத்து பணி நிரவல் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் இன்று (நவ.17) சென்னையில் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் தனி அலுவலர்கள், பிரிவு அலுவலர்கள் பதவி இறக்கம் குறித்து தீர்மானம் வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது. இதனை அறிந்த தனி அலுவலர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்கள் இன்று (நவ) காலை 11 மணி அளவில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் முழக்கமிட்டபடி பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் முன்பு போலீஸார் வைத்திருந்த தடுப்புக்கட்டைகளை ஆவேசமாக தள்ளிவிட்டு நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தனி அலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள் பணி இறக்கம் செய்யப்பட்டு உதவி பிரிவு அலுவலர் பணி வழங்கப்பட்டால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ 25 ஆயிரம் வரை சம்பளம் குறையும் என்று கூறப்படுகிறது. பல்கலைக்கழக வளாகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in