Published : 17 Nov 2022 06:28 AM
Last Updated : 17 Nov 2022 06:28 AM

அரசு மருத்துவமனைகளை கண்காணிக்க பறக்கும் படைகள்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்களின் வருகை, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை ஆகியவற்றை கண்காணிக்க மண்டல மற்றும் மாவட்ட அளவில் பறக்கும் படைகளை அமைக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் மருந்துகளை காலாவதியாகச் செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி, ஓய்வூதிய பலன்களை வழங்க மறுத்ததை எதிர்த்து மருந்து காப்பக பொறுப்பாளரான முத்துமாலை ராணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மனுதாரரான முத்துமாலை ராணி மீதான நடவடிக்கைகளை ரத்து செய்து, புதிதாக விசாரணை நடத்த அரசுக்கும், அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி மனுதாரருக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும், “அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள், செவிலியர்களின் வருகை, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை அவ்வப்போது திடீர் சோதனை நடத்தி கண்காணிக்கும் வகையில் மண்டல மற்றும் மாவட்ட அளவில் பறக்கும் படைகளை அமைக்க வேண்டும்” என சுகாதாரத் துறை செயலருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். இந்த பறக்கும் படைகளின் செயல்பாடுகளை தமிழக அரசும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x