Published : 14 Nov 2022 04:28 PM
Last Updated : 14 Nov 2022 04:28 PM

வேலூர் சிஎம்சி ராகிங் விவகாரம் | மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

கோப்புப்படம்

சென்னை: வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ராகிங் விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், 40-க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணபடுத்தி ராகிங் செய்ததாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக இறுதி ஆண்டு பயிலும் 7 மாணவர்களை கல்லூரி நிர்வாகம், சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. மேலும், கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் அடிப்படையில், பாகாயம் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 7 மாணவர்கள் மீதும் தமிழ்நாடு ராகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "கல்லூரியில் ராகிங் குறித்து புகார் வந்ததும், கல்லூரி முதல்வர், விடுதி வார்டன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் ராகிங்கில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 7 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக காவல் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில் 7 மாணவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் சட்டப்படி கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்கள். கல்லூரியின் கொள்கை விளக்க குறிப்பிலும், ராகிங்கை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ளது. ராகிங் தடுப்பு சட்டங்களை கல்லூரி முறையாக பின்பற்றி வருகிறது" என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "பெயர் பெற்ற கல்வி நிறுவனமான சிஎம்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் முன் கூட்டியே தடுக்க வேண்டியது யார் பொறுப்பு?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மருத்துவ நிர்வாகம் தரப்பில், "இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், "கல்வி நிறுவனங்களில் ஒழுக்கம் என்பது முக்கியம். ஒழுக்கம் இல்லாமல், மாணவர்கள் தங்கப் பதக்கமே பெற்றாலும் பயனில்லை. எனவே இந்த விவகாரம் குறித்து எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிஎம்சி மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x