Published : 08 Nov 2022 06:38 AM
Last Updated : 08 Nov 2022 06:38 AM

கோவை கார் வெடிப்புச் சம்பவம் | கைதான 6 பேரும் புழல் சிறைக்கு மாற்றம்

கோவை: கோவையில் நடந்த கார் வெடிப்புச் சம்பவத்தில் கைதான 6 பேரும், கோவை மத்திய சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறைக்கு நேற்று மாற்றப்பட்டனர். கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த, அதே பகுதியில் வசித்து வந்த ஜமேஷா முபின்(25) என்பவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக உக்கடத்தைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன்(23), ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26), வின்சென்ட் சாலையைச் சேர்ந்த அப்சர்கான்(28) ஆகிய 6 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, கைது செய்யப்பட்டவர்களில் அப்சர்கானை தவிர மீதமுள்ள 5 பேரையும் தனிப்படை போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரித்தனர்.

இச்சம்பவத்தின் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கு என்ஐஏ-க்கு மாற்றப்பட்டது. கோவை கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் பிரத்யேகமாக முதல் தகவல் அறிக்கை பதிந்து விசாரித்து வருகின்றனர். சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கவுள்ளது. இதனால், கைதான 6 பேரையும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் நேற்று மதியம் கோவை மத்திய சிறையில் இருந்து அழைத்துச் சென்று சென்னை புழல் சிறையில் அடைத்தனர். விரைவில் இவர்களை தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x