Last Updated : 03 Nov, 2022 07:51 PM

51  

Published : 03 Nov 2022 07:51 PM
Last Updated : 03 Nov 2022 07:51 PM

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழன் சதய விழாவை புறக்கணித்த அமைச்சர்கள்?!

தஞ்சை பெரிய கோவில் | கோப்புப் படம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைபெற்ற ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழாவை தமிழக அமைச்சர்கள் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1037-வது சதயவிழா இன்று (3-ம் தேதி) நடைபெற்றது. இந்த விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு ராஜராஜ சோழன் விருது வழங்கி சதய விழா பேரூரையாற்றுவார்கள் என சதய விழா குழு சார்பில் பத்திரிகை அச்சிட்டு விநியோகம் செய்யப்பட்டது. சதய விழாக்குழு சார்பிலும் அமைச்சர்கள் நிச்சயம் பங்கேற்பார்கள் என செய்தியாளர்கள் சந்திப்பிலும் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைபெற்ற சதய விழாவில் அமைச்சர்கள் இருவரும் பங்கேற்கவில்லை. ஆனால், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருச்சியிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் தஞ்சாவூரில் உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக தஞ்சாவூர் செய்தி மக்கள் தொடர்பு துறையிலிருந்து இன்று முற்பகல் 11 மணிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. பின்னர், சிறிது நேரம் கழித்து அமைச்சர் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக தகவல் அளிக்கப்பட்டது.

தஞ்சாவூரில் அரசு சார்பில் நடைபெற்ற மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதயவிழா நிகழ்ச்சியில் பங்கேற்காமல், கும்பகோணம் அருகே பம்பப்படையூரில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி இருவரும் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகள் வந்தால் பதவி பறிபோகிவிடும் என்ற அச்சத்தில்தான் தமிழக அமைச்சர்கள், தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று பரவலாகப் பேசப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x