Published : 03 Nov 2022 06:59 AM
Last Updated : 03 Nov 2022 06:59 AM

ஆளுநரை திரும்ப பெறுமாறு குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க கூட்டணி கட்சி எம்.பி.க்களிடம் கையெழுத்து பெறுகிறது திமுக

சென்னை: ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் மனு அளிப்பதற்காக கூட்டணி கட்சிஎம்.பி.க்களிடம் திமுக சார்பில் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல், அவர்பங்கேற்கும் நிகழ்வுகளில் திராவிடம், புதிய கல்விக் கொள்கை, சனாதனம், ஆரியம், பட்டியலின மக்கள், திருக்குறள் ஆகியவை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அரசியலமைப்பு சட்டப்படி பதவியேற்றுக் கொண்ட ஆளுநர், அதற்கு எதிரான கருத்துகளை வெளியிடுவதாக சமீபத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அறிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் மனு அளிக்க திமுக திட்டமிட்டுள்ளது.

இதற்கு வலு சேர்க்கும் வகையில், கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களுக்கு, திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், கட்சி பொருளாளருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக் கோரி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளிக்க திமுக முடிவெடுத்துள்ளது. திமுக மற்றும் இதே கருத்து கொண்டஎம்.பி.க்கள் அனைவரும் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்து, குடியரசுத் தலைவருக்கு அளிக்கும் மனுவை நவ.3-ம் தேதிக்கு (இன்று) முன்பாக படித்துப் பார்த்து கையெழுத்திடும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் அறிவாலயம் வந்து கடிதத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். நேற்று அறிவாலயம் வந்த மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ, ‘‘அரசியல் சட்டத்தின் முகவுரையில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிராக ஆளுநர் பேசுகிறார்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x