Published : 03 Nov 2022 05:05 AM
Last Updated : 03 Nov 2022 05:05 AM

ஆந்திராவில் கனமழை - வயலில் மின்கம்பி அறுந்து 6 பெண்கள் உயிரிழப்பு

அனந்தபூர்: ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழைக்கு உயர் அழுத்த மின் கம்பி அறுந்து வயலில் விழுந்ததில், விவசாய கூலித் தொழிலாளர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திரா - கர்நாடகா மாநில எல்லையில், ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், பொம்மனஹோலு மண்டலம், தர்கா ஹொஸ்னூரு கிராமத்தில், ஒரு விவசாயிக்கு சொந்தமான நிலத்தில், சோளப் பயிரில் களை எடுக்கும் பணியில் நேற்று 9 பெண் தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று திடீரென அந்த நிலத்தின் மேலே இருந்த உயர் அழுத்த மின் கம்பி அறுந்து அங்கிருந்த டிராக்டரின் மீது விழுந்தது. இதனால், மின்சாரம் பாய்ந்ததில், 9 பெண்களும் தூக்கி எறியப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த மற்ற 3 பேரை ராயதுர்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். இவர்களின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மின்துறை அதிகாரிகள், ஊழியர்களின் அலட்சியத்தால் தான் மின்கம்பி அறுந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது தொடர்பாக பொம்மனஹோலு போலீஸார் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x