Published : 29 Oct 2022 06:30 AM
Last Updated : 29 Oct 2022 06:30 AM

கோவை வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைத்ததில் தாமதம் இல்லை; எந்த ஆதாரமும் அழிக்கப்படவில்லை: ஆளுநருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

தூத்துக்குடி: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைத்ததில் தமிழக அரசு தாமதம் செய்யவில்லை. வழக்கு தொடர்பான எந்த ஆதாரமும் அழிக்கப்படவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,‘‘கோவை கார் சிலிண்டர் வெடிப்புசம்பவம் நடந்த பிறகு, தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு பரிந்துரைக்க தமிழக அரசு4 நாட்கள் அவகாசம் எடுத்துக்கொண்டது தவறு. அவகாசம் வழங்கினால், தீவிரவாதிகள் அனைத்து தடயங்களையும் அழித்துவிட வாய்ப்பு உண்டு’’ என்று கூறினார்.

இந்நிலையில், அரசு சார்பில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், தூத்துக்குடியில் தமிழகதொழில் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு நேற்று மாலை கூறியதாவது: கோவையில் கடந்த 23-ம் தேதி காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் நடந்த உடனேயே தமிழக காவல் துறையினர் துரிதமாக விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் வீட்டில் சோதனைநடத்தியதுடன், அவரது கூட்டாளிகளையும் உடனடியாக கைது செய்தனர். சம்பவம் நடந்த உடனேயே மத்திய உளவுத்துறை (ஐ.பி.),தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஐ.பி., என்ஐஏ உடன் இணைந்தே தமிழக காவல் துறை இந்த வழக்கை விசாரித்து வந்தது.

முதல்வர் நேரடி கண்காணிப்பு: விசாரணையை தமிழக முதல்வர் நேரடியாகவே கண்காணித்து வந்தார். இந்த சம்பவத்தில் பயங்கரவாத தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, வழக்கு விசாரணையை என்ஐஏவிடம் தமிழக அரசு ஒப்படைத்தது. வழக்கு தொடர்பான அனைத்துஆதாரங்கள், ஆவணங்களும்அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் அனைத்துதகவல்களும், விவரங்களும் தொடர்ந்து மத்திய உளவுத்துறைக்கும், என்ஐஏவுக்கும் முறையாக தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது.

என்ஐஏ பாராட்டு: தமிழக காவல் துறையினர் நடத்திய விசாரணையை என்ஐஏபாராட்டியுள்ளது. ஆனால், வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைப்பதில் தாமதம் செய்ததுபோல ஆளுநர் கூறியுள்ளார். எந்த மாநிலத்தில் எந்த சம்பவம் நடந்தாலும் ஆரம்பகட்ட விசாரணையை மாநில போலீஸார்தான் நடத்துவார்கள். அதன்பிறகே தேவையைப் பொருத்து, மத்திய உளவுத்துறை மற்றும் என்ஐஏ விசாரணை நடத்துவார்கள். அவ்வாறே தமிழக காவல் துறையும் தற்போது வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைத்துள்ளது. டெல்லி, மேற்கு வங்கம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக என்ஐஏ 10 நாட்கள் முதல் 3 மாதங்கள் கழித்தே வழக்கு பதிவு செய்துள்ளது.

முறையாக ஒப்படைப்பு: கோவை சம்பவத்தில் தமிழக அரசு எந்த தாமதமும் செய்யவில்லை. எந்த ஆதாரமும் அழிக்கப்படவில்லை. தமிழக காவல் துறை சேகரித்த ஆதாரங்கள் அனைத்தும் முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் எந்த காலகட்டத்திலும், சூழ்நிலையிலும், எந்தஒரு தீவிரவாத, பயங்கரவாத செயல்களையும் முதல்வர் அனுமதிக்க மாட்டார். அதில் அவர் உறுதியாக இருக்கிறார். இத்தகைய செயல்கள் எந்த ரூபத்தில், எந்த வடிவத்தில் வந்தாலும் அதை விரட்டி அடிக்கும் உறுதிபடைத்தவராக முதல்வர் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x