Published : 30 Nov 2016 10:08 AM
Last Updated : 30 Nov 2016 10:08 AM

நல்லொழுக்க பாடத்தில் ஆசிரியர்களுக்கு 2 நாள் சிறப்பு பயிற்சி

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 9, 10-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், ஒழுக்கத்தை நிலைநாட்டவும் நற்பண்புகள் கொண்ட கல்வி (நல்லொழுக்க பாடம்) வழங்கப்பட உள்ளது. அதற்கான வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளி பாடத்துடன் 40 வகையான நற்பண்புகளை இணைத்து கற்பித்தலும், கற்றலும் என்னும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்காக பிரத்யேக ஆசிரியர் கையேடு தயாரிக்கப்பட்டு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள நற்பண்புகள் பாடவேளையைப் பயன்படுத்தி வாரத்துக்கு ஒரு பாடம் என்ற முறையில் ஆண்டு முழுவதும் நற்பண்பு கல்வி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இதற்காக மாநில அளவில் முதன்மை கருத்தாளர் பயிற்சி சென்னையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை (நேற்று) நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன (டயட்) விரிவுரையாளர் ஒருவரும், பட்டதாரி ஆசிரியர்கள் 2 பேரும் கலந்துகொண்டனர். இப்பயிற்சி புதன்கிழமையும் (இன்றும்) நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் டிசம்பர் 2, 3-ம் தேதிகளில் பயிற்சி நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, ஒன்றியங்களில் டிசம்பர் 7, 8-ம் தேதிகளில் பயிற்சி நடைபெறும். இந்தப் பயிற்சியின் மூலம் 15 ஆயிரம் ஆசிரியர்களும் 20 லட்சம் மாணவ-மாணவிகளும் பயன்பெறுவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x