Published : 18 Oct 2022 12:27 PM
Last Updated : 18 Oct 2022 12:27 PM

காவல்துறை வரம்பை மீறி செயல்பட்டுள்ளது: அருணா ஜெகதீசன் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

கோப்புப்படம்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், இந்த சம்பவத்தில் காவல்துறை தனது அதிகாரத்தையும் வரம்பையும் மீறி செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரைவயில் இன்று ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் முக்கிய அம்சங்கள்.

> பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறை வரம்பை மீறியுள்ளது.

> தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறை அத்துமீறி செயல்பட்டுள்ளது.

> துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட 17 காவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

> அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை.

> துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.20 லட்சம் போக, எஞ்சியத் தொகையை வழங்க வேண்டும்.

> துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். ஏற்கெனவே வழங்கிய ரூ.5 லட்சம் போக எஞ்சியத் தொகையை வழங்க பரிந்துரை.

> கலவரத்தின்போது நிகழ்ந்த ஜஸ்டின் செல்வமிதிஷின் இறப்பை இந்த தூப்பாக்கிச்சூட்டில் இறந்துபோன 13 நபர்களுக்கு இணையாக பாவித்து அவரது குடும்பத்தாருக்கு அரசு தரப்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அவரது தாயாருக்கு அரசு வேலை வழங்க பரிந்துரை.

> பலத்த காயமடைந்த காவல்துறையைச் சேர்ந்த மணிகண்டனுக்கு மருத்துவ வசதிகளுக்கான நிவாரணம் வழங்க பரிந்துரை.

> தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் போன்ற நிகழ்வுகள் வரும் காலங்களில் நிகழாமல் இருப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரை.

> அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.


பின்னணி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டத்தின் நூறாவது நாளின்போது ஏற்பட்ட கலவரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 22.5.2018 அன்று நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகவும், இறப்பு, காயமடைந்தவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு, பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்தும் விசாரணை நடத்த இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x