Published : 15 Oct 2022 06:34 AM
Last Updated : 15 Oct 2022 06:34 AM

வீட்டுவசதி வாரிய திருமண மண்டபத்தில் ரூ.50 லட்சம் பொருட்கள் திருட்டு: வாரிய தலைவர் பூச்சி முருகன் ஆய்வு

சென்னை: வேளச்சேரியில் வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் ரூ.50 லட்சம் பொருட்கள் திருடப்பட்ட நிலையில், வாரிய தலைவர் பூச்சி முருகன் ஆய்வு செய்து, அலட்சியமாக இருந்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். வேளச்சேரியில் உள்ள வீட்டு வசதி வாரியகுடியிருப்பு பகுதியில் வாரியத்துக்கு சொந்தமாக திருமண மண்டபம் கடந்த 2018-ம் ஆண்டுகட்டப்பட்டது. ரூ.8.7 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த மண்டபத்தை கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இதற்கு ‘அம்மா திருமண மண்டபம்’ என பெயரிடப்பட்டது. ஆனால், திருமண மண்டபத்தை நிர்வகிக்க ஒப்பந்தம் எடுக்க யாரும் வராதது, மண்டபத்துக்கான சரியான சாலை வசதி இ்ல்லை போன்ற காரணங்களால் மண்டபம் செயல்படாமல் முடங்கியிருந்தது.

இதற்கிடையில், இந்த மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டிகள், மின் சாதனங்கள், மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோயின. இதுகுறித்து வாரியம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்றுவீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் தலைமையில் அதிகாரிகள் இந்த மண்டபத்தை ஆய்வு செய்தனர். பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பூச்சி முருகன் உத்தரவிட்டார். ஆய்வின்போது, கண்காணிப்பு பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் அருள் செல்வி உள்ளிட்டோர் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x