Published : 10 Oct 2022 12:38 PM
Last Updated : 10 Oct 2022 12:38 PM

தருமபுரி அருகே லாரி மீது கார் மோதி விபத்து: சிறுவன் உள்பட 3 பேர் பலி

தருமபுரி: தருமபுரி அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல் (22). இவரது நண்பர்களான தருமபுரி குமாரசாமிபேட்டையைச் சேர்ந்த ஜீவபாரதி (20), சந்தோஷ் (15) உட்பட 5 பேர் நேற்று இரவு காரில் தருமபுரி குண்டலபட்டி பகுதியில் இருந்து பென்னாகரம் செல்ல தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துள்ளனர்.

தருமபுரி அடுத்த சவுளுப்பட்டி மேம்பாலத்தில் சென்றபோது, முன்னால் இரும்பு பாரம் ஏற்றி சென்ற லாரி மீது ராகுல் மற்றும் அவரது நண்பர்கள் சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராகுல், சந்தோஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த தருமபுரி நகர போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்கு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதுடன், விபத்து காரணமாக அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை சரி செய்து வாகனங்களை அப்புறப்படுத்தினர்.

இதனிடையே, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூன்று பேரில் ஜீவபாரதி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இருவர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனிடையே, சிறுவன் உட்பட 3 பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x