Published : 29 Sep 2022 05:34 PM
Last Updated : 29 Sep 2022 05:34 PM

‘பொன்னியின் செல்வன் பாகம் 1’-ஐ சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட் தடை

சென்னை: 'பொன்னியின் செல்வன் பாகம்-1' திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தை இந்தியாவில் பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல், உள்ளிட்ட 29 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 2405 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க கோரி லைகா நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, " 'பொன்னியின் செல்வன் பாகம்-1' திரைப்படம் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, சட்டவிரோதமாக படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். எனவே இந்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 'பொன்னியின் செல்வன் பாகம்-1' திரைப்படத்தை இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x