Published : 28 Sep 2022 02:18 PM
Last Updated : 28 Sep 2022 02:18 PM

ஓசூர் வனக்கோட்டத்தில் புதியதாக அமையும் காவிரி தெற்கு வன உயிரின சரணாலய வனப்பகுதியில் ஆய்வு

ஓசூர் வனக்கோட்டத்தில் புதியதாக அமைய உள்ள காவிரி தெற்கு வன உயிரின சரணாலய வனப்பகுதியை ஆய்வு செய்யும் அதிகாரிகள்

ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில் புதியதாக அமைக்கப்படும் காவிரி தெற்கு வன உயிரின சரணாலய வனப்பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஓசூர் வனக்கோட்டம் மொத்தம் 1501ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ராயக்கோட்டை, ஜவளகிரி, உரிகம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் அடங்கியுள்ளன. இந்த வனச்சரகங்களில் அரிய வகை வன உயிரினங்களான யானை, சிறுத்தை, காட்டெருமை, கரடி, புள்ளிமான், கடமான், முயல், எறும்புத்திண்ணி, மயி்ல்கள், மற்றும் அறியவகை அணில் இனமான சாம்பல் நிற அணில்கள், எகிப்திய கழுகு போன்ற வன உயிரினங்களும் மற்றும் 272 வகையான பறவை இனங்களும், 172 வகையான வண்ணத்துப்பூச்சிகளும், 468 வகையான தாவர இனங்களும் இந்த வனச்சரகங்களில் காணப்படுகின்றன.

இந்த வன உயிரினங்களை பாதுகாக்கும வகையில் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துடன் அஞ்செட்டி வனச்சரகத்தின் ஒரு பகுதி, ஜவளகிரி வனச்சரகத்தின் ஒரு பகுதி(தளி), ராயக்கோட்டை வனச்சரகத்தின் ஒரு பகுதி(ஊடேதுர்கம்) ஆகியவை இணைக்கப்பட்டு சுமார் 504.33ச.கி.மீ. பரப்பளவில் காவிரி வடக்கு வன உயிரின சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஓசூர் வனக்கோட்டத்தில் இரண்டாவதாக உரிகம் வனச்சரகத்தை உள்ளடக்கிய காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம் கூறியது: "காவிரி ஆற்றங்கரையை ஒட்டி 26 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள உரிகம் வனச்சரகம் மற்றும் அதைச்சுற்றியுள்ள வனப்பகுதிகளை இணைத்து காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த காவிரி தெற்கு வன உயிரின சரணாலயத்தில் உரிகம் வனச்சரகத்தில் உள்ள உரிகம், தக்கட்டி, கெஸ்த்தூர், மல்லஹள்ளி, கெஸ்த்தூர் விரிவாக்கம், பிலிக்கல் ஆகிய 6 காப்புக்காடுகளும் முழுவதுமாக இணைக்கப்படுகிறது. இவற்றுடன் அஞ்செட்டி வனச்சரகத்தில் ஒரு பகுதியும், ஜவளகிரி வனச்சரகத்தின் ஒரு பகுதியும் இணைக்கப்பட்டு காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம் உருவாக்கப்படுகிறது. இதற்காக மாவட்ட வனத்துறை சார்பில் வனப்பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு வருவாய் துறை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து இந்த காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம் அமைய உள்ள உரிகம், தக்கட்டி, கெஸ்த்தூர், மல்லஹள்ளி, பிலிக்கல், ராசிமணல் உள்ளிட்ட வனப்பகுதிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொணடார். இந்த ஆய்வு பணியின் போது ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி, அஞ்செட்டி வட்டாட்சியர் ஆர்.தேன்மொழி, கிராமநிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x