Published : 18 Sep 2022 04:00 AM
Last Updated : 18 Sep 2022 04:00 AM

ராம்கோ சூப்பர்கிரீட், ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் கட்டிட கலைநுட்ப, கட்டமைப்பு கலைநுட்ப விருதுகள்

சென்னை: கட்டுமானத்திலும் கட்டமைப்பிலும் தனித்துவத்துடன் செயலாற்றும் பொறியாளர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் விருதுகளை வழங்கவுள்ளது.

கட்டுமானங்களிலும் கட்டமைப்புகளிலும் சிறந்து விளங்கும் பொறியாளர்களைக் கவுரவிக்கும் வகையில் சிறந்த பொறியாளர்களைத் தேர்வுசெய்து, அவர்களுக்கு ‘கட்டிடக் கலைநுட்ப விருதுகள்’ மற்றும் ‘கட்டமைப்பு கலைநுட்ப விருதுகளை’ வழங்கும் அறிவிப்பு கடந்த வாரம் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியானது.

அறிவிப்பு வெளியான ஒருவாரத்துக்குள் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து உள்ளனர்.

கிராமப்புற வீட்டுக் கட்டுமானம், நகர்ப்புற குடியிருப்புக் கட்டுமானம், பொதுச் சேவை கட்டமைப்புகள் (பாலம், சாலை, மெட்ரோ ரயில் நிலையம், மருத்துவமனை), பொதுப் பயன்பாடு கட்டமைப்புகள் (பூங்கா, விளையாட்டு அரங்கம்), தொழிற்சாலைக் கட்டமைப்பு ஆகிய 5 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

மேலும், மாற்றுக் கட்டுமான பொருட்களைப் பயன்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானம் (சூரிய ஆற்றலைப் பயன்படுத்துதல்), புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், குறைவான கட்டுமான செலவு, மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த கட்டுமானம், பேரிடரைத் தாங்கும் திறன் ஆகியன விருதுக்கான சிறப்பு அம்சங்களாகக் கருதப்படும்.

இவ்விருது நிறுவனத்துக்கானது அல்ல. குறிப்பிட்ட திட்டத்துக்குத் தலைமை வகித்த தனி நபருக்கானது. விருதுக்குத் தன்னைத் தகுதியானவர் என்று கருதும் நபரோ அல்லது அவரை அறிந்தவர்களோ அல்லது அவர் சார்ந்திருக்கும் நிறுவனங்களோ பரிந்துரை செய்யலாம்.

விருதுக்குப் பரிந்துரைக்கப்படுபவர், கட்டிய கட்டுமானங்களும் கட்டமைப்புகளும் கடந்த 5 முதல்10 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டவைகளாக இருக்க வேண்டும். தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த அரசு, தனியார் நிறுவனங்களில் சிறப்பாகப் பணியாற்றும் பொறியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருதுக்குத் தகுதியானவர்களைப் பரிந்துரை செய்யும்போது, எந்தப் பிரிவுக்கான பரிந்துரை என்பதோடு, அதற்கான சான்றாதாரங்களையும் உடன் இணைத்து https://www.htamil.org/01045 என்ற லிங்க்கில் விண்ணப்பிக்க வேண்டும்.

அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, செப்.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விருது நிகழ்வை ரினாகான் ஏ.ஏ.சி ப்ளாக்ஸ் இணைந்து வழங்குகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x