Published : 29 Aug 2022 09:05 AM
Last Updated : 29 Aug 2022 09:05 AM

திண்டுக்கல் அதிமுகவில் ஓபிஎஸ்-க்கு ஆதரவு திரட்டும் ஒன்றிய செயலாளர்கள்; அமைதி காக்கும் இபிஎஸ் ஆதரவாளர்கள்

திண்டுக்கல் மாவட்ட அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு திரட்டும் பணியில் ரெட்டியார்சத்திரம், வேடசந்தூர் ஒன்றியச் செயலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் ஆதரவாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனி வாசன், நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோர் உள்ளனர். மாவட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் இபிஎஸ் ஆதரவாளர்களாக இருப்ப தால், இங்கு ஓபிஎஸ்-க்கு ஆதரவாளர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், அதிமுகவின் முதல் எம்.பி.யும் கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுத் தந்தவருமான மாயத்தேவர் அண்மையில் காலமானபோது அவருக்கு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித் தனியே வந்து அஞ்சலி செலுத்தினர். அப்போது ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்க திண்டுக்கல் நிர்வாகிகள் யாரும் செல்கிறார்களா என்பதை பழனிசாமி ஆதரவாளர்கள் கண்காணித்தனர்.

இந்நிலையில், ரெட்டியார்சத்திரம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பசும்பொன் முதல் ஆளாக ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்றார். இதனால் இபிஎஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்பு வேடசந்தூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன், பெரியகுளம் சென்று ஓபிஎஸ்சை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர்.

நீதிமன்றத் தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்குச் சாதகமாக வந்த நிலையில், அதிமுகவினரின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் ஓபிஎஸ்-க்கு ஆதரவு திரட்டும் பணியில் பசும்பொன், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் களம் இறங்கி யுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுகையில், அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பம். திண்டுக்கல் மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வர பலர் தயாராக உள்ளனர். பல நிர்வாகிகள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். விரைவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வெளிப்படையாக அவர்கள் ஆதரவு தெரிவிப்பர் என்று கூறினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு திரட்டும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், அணி மாறிச் செல்பவர்களை தடுக்க முடியாமல் பழனிசாமி ஆதரவாளர்கள் அமைதி காத்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x