Published : 29 Aug 2022 07:05 AM
Last Updated : 29 Aug 2022 07:05 AM

கடலூரில் சிறை அதிகாரி வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கும்பல்

கடலூர் கேப்பர் குவாரி மலை பகுதியில் உள்ள உதவி சிறை அதிகாரி குடியிருப்பு. (அடுத்த படம்) பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கடலூர் மத்திய சிறை உதவி அதிகாரியின் வீட்டு சமையலறை.

கடலூர்: கடலூர் மத்திய சிறை உதவி சிறை அதிகாரி வீட்டை, மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினர்.

கடலூர் கேப்பர் குவாரி மலையில் உள்ள மத்திய சிறையில், 500-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். கடந்த 6-ம் தேதி உதவி சிறை அதிகாரி மணிகண்டன், சிறை காவலர்களுடன் சென்று கைதிகளின் அறைகளில் சோதனை நடத்தினர்.

இச்சோதனையில், சென்னை எண்ணூரைச் சேர்ந்த கைதி தனசேகரன் என்பவரது அறையிலிருந்து, செல்போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது மணிகண்டனுக்கும், கைதி தனசேகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுஉள்ளது.

இந்நிலையில், “கைதி தனசேகரனை வேண்டும் என்றே உதவி சிறை அதிகாரி மணிகண்டன் துன்புறுத்தி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”என தனசேகர் தரப்பு வழக்கறிஞர்கள், கடந்த 11-ம் தேதி கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் அந்தப் புகாரை ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில் மத்திய சிறை அருகே, சிறை அதிகாரிகளுக்கான குடியிருப்பில் உள்ள, மணிகண்டன் வீட்டில் நேற்று அதிகாலை மர்மநபர்கள், சமையல் அறை ஜன்னல்கதவை திறந்து அதன் வழியாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். சத்தம் கேட்டு எழுந்து பார்த்த மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தனர்.

இதுகுறித்து கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீஸார், நேரில்சென்று விசாரணை நடத்தினர். சமையல் அறையின் ஜன்னலுக்கு வெளிப்புறம் கிடந்த பெட்ரோல் பாட்டிலை போலீஸார் கைப்பற்றிஉள்ளனர்.

செல்போன் பறிமுதல் செய்ததால் கைதி தனசேகரன், கூலிப்படை மூலம் இதை செய்தாரா அல்லது வேறு எதுவும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x