Published : 29 Aug 2022 06:54 AM
Last Updated : 29 Aug 2022 06:54 AM

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர் 6 பேர் கைது

ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளம் அருகே தர்ணாவில் ஈடுபட்ட மீனவர்கள்.

ராமேசுவரம்: தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

நேற்று அதிகாலை தலைமன்னார் அருகே ஒரு விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிஷாந்த், ஆண்டி, கருணாநிதி, உலகநாதன், சூசை வியாகுலம், சேசு ஆகிய 6 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இதைக் கண்டித்து ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளம் அருகே மீனவர்கள் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர், மீனவப் பிரதிநிதி எம்ரிட் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில், இலங்கை கடற்படையினரால் 6 பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் அவர்களை தமிழகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியும் இன்று (ஆக.29) ராமேசுவரத்தில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதென மீனவர்கள் முடிவு செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x