Published : 18 Aug 2022 03:38 AM
Last Updated : 18 Aug 2022 03:38 AM

பிரதமருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு - தமிழகத்தின் தேவைகள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தார்

சென்னை: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதல்வர், தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளித்தார். முன்னதாக, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை முதல்வர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த ஜூலை 28 முதல் ஆக.9 வரை நடந்தது. ஜூலை 28-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்தார். விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், பிரதமரை சந்தித்து, நன்றி தெரிவிப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றார். அவருடன் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, முதல்வரின் செயலர்கள் சென்றனர். நள்ளிரவு டெல்லி சென்ற முதல்வரை டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட எம்.பி.க்கள், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அன்றிரவு முதல்வர் அங்கு தங்கினார்.

இதையடுத்து, நேற்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளின் தொகுப்பு அடங்கிய ‘ஹோம் ஆஃப் செஸ்’ என்ற நூலையும், தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்கள் அடங்கிய பெட்டகத்தையும் குடியரசுத் தலைவருக்கு முதல்வர் பரிசளித்தார்.

அதைத் தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்த முதல்வர், அவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்புகளுக்குப் பிறகு தமிழ்நாடு இல்லத்துக்கு சென்ற முதல்வர், அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் பதவியேற்பு விழாக்களுக்கு அழைப்பு வந்திருந்தது. என்னால் வரமுடியாத சூழல் ஏற்பட்டதால், இன்று அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இருவரும் என்னிடத்தில் மகிழ்ச்சியாக பேசினர். தமிழகத்தில் இருக்கும் அரசியல் சூழல், ஆட்சியின் சிறப்புகள் பற்றி என்னுடன் பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பு மனநிறை
வாக இருந்தது. சென்னையில் நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம்.

அதை ஏற்று பிரதமர் சென்னைக்கு வந்து போட்டியை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை நேரடியாக வந்து கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அப்போது, கரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டேன். தொலைபேசியில் அதுபற்றி சொன்னதை ஏற்று பிரதமர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். போட்டியை தொடங்கி வைத்ததற்கு நன்றி சொல்வதற்காக பிரதமரை சந்திக்க உள்ளேன்.

ஏற்கெனவே பிரதமரிடம் தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகளை எடுத்து வைத்துள்ளேன். அவற்றில் இன்னும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. எனவே, அதையும் நினைவூட்டி, கோரிக்கைகளை பிரதமரிடம் தெரிவிக்க இருக்கிறேன். நீட் விலக்கு மசோதா குறித்து ஏற்கெனவே இருந்த குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். புதிய குடியரசுத் தலைவர் இப்போதுதான் பொறுப்பேற்றுள்ளார். அதனால், அவரிடம் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும்தான். இவ்வாறு முதல்வர் கூறினார்.

அதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மாலை 4.30 வரை நீடித்தது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்கு வந்து போட்டியை தொடங்கி வைத்ததற்காகவும், விருந்தோம்பல் குறித்து பாராட்டியதற்கும் பிரதமருக்கு முதல்வர் நன்றி தெரிவித்தார். பின்னர், தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்தார்.

குறிப்பாக, நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தருவது, ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது, புதிய கல்விக் கொள்கை, தமிழகத்துக்கு துறைகள் வாரியாக வரவேண்டிய நிலுவைத் தொகைகள், இலங்கை கடற்படையால் தமிழக மீனர்கள் சிறைபிடிக்கப்படுவது, நதிநீர் இணைப்புத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது, பிரதமருக் கும் பாரம்பரிய நெல் ரகங்கள், சிறுதானியங்கள் அடங்கிய நினைவுப் பரிசு மற்றும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுகள் அடங்கிய தொகுப்பு நூல் ஆகியவற்றை முதல்வர் வழங்கினார். டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவே முதல்வர் சென்னை திரும்பினார்.

பாரம்பரிய சிறுதானியங்கள்

குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு தமிழகத்தின் சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி ரகங்கள் இடம் பெற்ற பெட்டகத்தை நினைவுப் பரிசாக முதல்வர் வழங்கினார். அந்த பரிசுப் பெட்டகத்தில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, குள்ளக்கார், சீரகசம்பா, குடவாழை ஆகிய பாரம்பரிய அரிசி ரகங்கள், கேழ்வரகு, கம்பு, சாமை, திணை, வரகு ஆகிய சிறுதானியங்கள் இடம் பெற்றிருந்தன. பெட்டியின் மேல் ‘கோல்டன் கிரைன்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ என்று ஆங்கிலத்திலும் மிழ்நாட்டின் தானியங்கள் என்று தமிழிலும் எழுதப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x