Published : 08 Aug 2022 02:35 PM
Last Updated : 08 Aug 2022 02:35 PM

கடன் செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு வேல்முருகன் வலியுறுத்தல்

பண்ருட்டி தி. வேல்முருகன் | கோப்புப் படம்.

சென்னை: “மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் நேரடியாகத் தலையிட்டு, சட்டவிரோதமாக செயல்படும் தனியார் நிதி நிறுவனங்களையும், கடன் செயலிகளையும் தடை செய்ய வேண்டும். கடன் செயலிகள் எங்கும் தரவிறக்கம் செய்ய முடியாதபடி இணைய சேவை வழங்குநர் வழியே முடக்க வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரித் தாக்குதல் போன்றவை ஏற்படுத்திய மிகப்பெரும் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கு முன்பாகவே, கரோனா பொதுமுடக்கம் ஏற்படுத்திய பெருந்தாக்கம் பல குடும்பங்களை வாழ்வாதாரமின்றி நிலை குலைய வைத்துவிட்டது.

இதன் காரணமாக, தங்களது குழந்தைகளை படிக்க வைக்கவும், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், கடன் செயலிகள் வாயிலாக அதிக வட்டிக்கு கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், குறிப்பிட்ட நேரங்களில் அவர்களால் கடனை திருப்பி செலுத்த முடியாமல், தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் சமீப காலமாக அதிகரித்திருப்பது பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது.

தற்போது அப்பட்டியலில், கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே கடன் தொல்லையால் சகோதரி ஜெயந்தி என்பவர் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. குள்ளஞ்சாவடி அருகே உள்ள அனுகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயந்தி. டீ கடை நடத்தி வரும் இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.6 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார்.

இதற்கான மாத தவணைத் தொகை சரியாக கட்டி வந்த நிலையில், பொருளாதார சூழ்நிலை காரணமாக கடைசி 2 மாத தவணைத் தொகையை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அத்தொகையை செலுத்த ஜெயந்தி அவகாசம் கேட்டுள்ளார்.

ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள், ஜெயந்தியின் வீட்டிற்கு வந்ததோடு, அவரது வீட்டில் அமர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக ஆபாச வார்த்தைகளால் ஜெயந்தியை பேசியுள்ளனர். மேலும், மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனால் அச்சமடைந்த ஜெயந்தி, தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த காலங்களில், தனியார் நிதி நிறுவனங்கள், கடன் செயலிகளால் அரங்கேறிய தற்கொலை நிகழ்வுகளின் அடிப்படையில், தனியார் நிதி நிறுவனங்களை, கடன் செயலிகளை முற்றாக முடக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஒன்றிய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளுக்கோ, நிதி நிறுவனங்களுக்கோ சென்று கடன் கேட்டால், உடனடியாக கிடைப்பதில்லை. இதற்கு காரணம், கடனை திருப்பிச் செலுத்தும் திறன் உள்ளதா என நிறைய சோதனைகள் செய்தே அவர்கள் கடன் வழங்குகிறார்கள். இதனால், எழை, எளிய மக்கள், தனியாரிடத்தில் கடனுக்காக கையேந்துகிறார்கள்.

படிக்காத பாமரர்கள் கந்துவட்டி கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார்கள். படித்தவர்களோ, கந்து வட்டிக்காரர்களை விட கொடுமையான, தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் இணையவழிக் கடன் செயலிகளிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.

நேரடியாக கந்துவட்டியில் கடன் வழங்கும் நபர்களை பிடிப்பது காவல் துறையினருக்கு எளிதானது. ஆனால், தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் செயலிகளை நிர்வாகிக்கும் கும்பலை கைது செய்வது கடினமானது. இக்காரணங்களால், தற்கொலைகள் நடைபெறுவது புதிய சிக்கலாக உருவெடுத்துள்ளது.

அதுமட்டுமின்றி, வெளிமாநிலங்களை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இதுபோன்ற, தனியார் நிதி நிறுவனங்கள் இணைய வழிக் கடன் செயலி நிறுவனங்கள், முதலில் கடன் வழங்கும்போது கடன் பெறுவோரின் தனிப்பட்ட தகவல்களையும், அவர்களது நண்பர்களின் எண்களையும் வாங்கிக் கொள்கின்றனர். கடன் பெற்றவர்களிடம் 10 முதல் 28 விழுக்காடு வரை அநியாய வட்டி வசூலிக்கின்றனர்.

இவை எதற்கும் இந்திய அரசின் சேம வங்கியின் அனுமதி கிடையாது. தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் செயலிகள் செயல்படுவதே சட்டவிரோதமானது. ஆனாலும், அரசுக்குத் தெரிந்தே இணையவழியில் அவை விளம்பரங்கள் வெளியிட்டு சுதந்திரமாக செயல்பட்டு கொண்டுள்ளன.

எனவே, ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் நேரடியாகத் தலையிட்டு, இந்த தனியார் நிதி நிறுவனங்களையும், கடன் செயலிகளையும் தடை செய்ய வேண்டும். கடன் செயலிகள் எங்கும் தரவிறக்கம் செய்ய முடியாதபடி இணைய சேவை வழங்குநர் வழியே முடக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

மேலும், சகோதரி ஜெயந்தி தற்கொலைக்கு காரணமான நிதி நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அந்நிதி நிறுவனத்தின் மேலாளர் மற்றும் ஆபாசமாக பேசிய ஊழியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

தற்கொலை செய்து கொண்ட ஜெயந்தியின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக, அரசு மற்றும் ஈக்வட்டாஸ் நிதி நிறுவனத்தின் தரப்பில் இருந்து 20 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.

தற்கொலை செய்துக் கொண்ட சகோதரி ஜெயந்திக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x