Published : 05 Aug 2022 06:24 AM
Last Updated : 05 Aug 2022 06:24 AM
சென்னை: சென்னையில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்த நார்வே நாட்டு தூதுக் குழுவினர், நவீன துறைமுகங்கள் அமைக்க ஒத்துழைப்பதாக உறுதியளித்தனர்.
இது தொடர்பாக பொதுப்பணித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நார்வே நாட்டு தூதுக் குழுவினர், கிறிஸ்டியன் ஆர்.வி.கார்ட்டர் தலைமையில் சென்னை தலைமைச் செலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து, சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.
குறிப்பாக, கடல்வழி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை கடல், கடலோரக் கப்பல் போக்குவரத்து, எல்என்ஜி அடிப்படையிலான கப்பல் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மேலாண்மை குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள சிறு துறைமுகங்கள் மற்றும் அவற்றின்செயல்பாடுகள் குறித்து குழுவினரிடம் அமைச்சர் எ.வ.வேலு விளக்கினார்.
தமிழகத்தில் நவீன துறைமுகங்கள் அமைக்கவும், கடல்வழி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைசெயல்பாடுகளுக்கும் ஒத்துழைப்பதாக நார்வே நாட்டு தூதுக் குழுவினர் தெரிவித்தனர். இது தொடர்பாக தமிழக அரசு தரப்பிலும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அமைச்சர் வேலுவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில், நார்வே நாட்டின் மூத்த சந்தை ஆலோசகர்கள் ஆர்த்தி குமார் பாட்டியா, ஆசிஷ் அகர்வால், வணிக ஆலோசகர் மோனிகா வால்டெஸ் கார்ட்டர், தமிழக நெடுஞ்சாலைத் துறைச் செயலர் பிரதீப் யாதவ், கடல்சார் வாரிய துணைத் தலைவர் எஸ்.நடராஜன், மாநில துறைமுக அலுவலர் எம்.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT