Last Updated : 15 Jul, 2022 06:01 PM

 

Published : 15 Jul 2022 06:01 PM
Last Updated : 15 Jul 2022 06:01 PM

சர்சைக்குரிய கேள்வி விவகாரம்: வருத்தம் தெரிவித்த பெரியார் பல்கலைக்கழகம்

சென்னை: சர்ச்சைக்குரிய கேள்வி விவகாரம் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்ஏ வரலாறு பாடத்திற்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வுக்கான கேள்வித்தாளில், ‘தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது?’ என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இது குறித்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்படும் என்று தமிழக உயர் கல்வித் துறை தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய கேள்வி விவகாரம் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வருத்தம் தெரிவித்துள்ளது. இது குறித்து பதிவாளர் கோபி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற முதுநிலை வரலாற்றுப் பாடத்தில் Part-A-வில் ஒரு மதிப்பெண் வினாவில் வரிசை எண். 11-ல் Which one is the lower caste belongs to Tamil Nadu? (தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது?) என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வினாத்தாள் அமைப்பது குறித்து பாடத்திட்டக்குழு வல்லுநர்கள் வழங்கும் பட்டியில் உள்ள பிற பல்கலைக்கழகம் மற்றும் பிற பல்கலைக்கழகத்தில் உள்ள இணைவு பெற்ற கல்லூரிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை அனுபவத்தின் அடிப்படையில் தலைவராக (Chairman for Question Paper Setting) நியமிக்கப்படுவர்.

குறைந்தது மூன்று வருடம் கற்பித்தல் அனுபவம் உள்ள பிற ஆசிரியர்களுக்கு கேள்வித்தாள் தயாரிக்கும் பொறுப்பை தலைவர் என்ற நிலையில் பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட பேராசிரியரே (Chairman) நியமித்து வினாத்தாள்கள் தயாரிக்கப்படும். அவர்கள் தயாரித்து வழங்கும் வினாத்தாள்கள் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டுள்ள பாடத்திட்டத்துக்கு உட்பட்டு அமைந்துள்ளதா? மதிப்பெண்கள் முறையாக பிரித்து வழங்கப்பட்டுள்ளனவா? சர்சைக்குரிய வார்த்தைகள் ஏதேனும் உள்ளனவா போன்றவற்றை தலைவர் என்ற நிலையில், அவரே இறுதி செய்து பல்கலைக்கழகத்துக்கு வினாத்தாள்களை அனுப்பிவைப்பார்.

அவ்வாறு அனுப்பும் போது ஒவ்வொரு பாடத்துக்கும் இரண்டு வேறுபட்ட வினாத்தாள்கள் தயாரித்து வழங்குவார்கள். அவ்வாறு வழங்கப்படும் வினாத்தாள்களில் ரேண்டம் முறையில் இரண்டு வினாத்தாள்களில் ஒன்று அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்படும். அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் வினாத்தாள் பல்கலைக்கழக வினாத்தாள் பிரிவால் அலுவலகப் பயன்பாட்டுக்கான வினாத்தாள் எண் குறிப்பிடபட்டு அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.

அச்சகத்திலிருந்து முழுமையாக மூடி முத்திரையிடப்பட்ட உரையில் கல்லூரி பெயர், தேர்வு நடைபெறும் நாள், விளாத்தாள்களின் எண்ணிக்கை மற்றும் வினாத்தாளின் வரிசை எண் உள்ளிட்டன அச்சடிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வழங்கப்படும். ரகசியம் கருதி பல்கலைக்கழக தேர்வுத்துறை அலுவலர்கள் மற்றும் வினாத்தாள்களை பணியாளர்கள் எவரும் படிப்பதற்கு அனுமதி இல்லை.

எனவே, இந்த சர்ச்கைக்குரிய வினா குறித்து பல்கலைக்கழகத்துக்கு எந்த விதமான உள்நோக்கமோ, நேரடியான தொடர்போ இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறான சர்ச்சைக்குரிய வினா கேட்கப்பட்டதன் அடிப்படையில், மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும், கல்வியாளர்களுக்கும், கல்லூரிகளுக்கும் மன உலைச்சல் ஏற்பட்டிருப்பின், பல்கலைக்கழகம் சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இனி வரும் காலங்களில் இவ்வாறான சர்ச்சைக்குரிய வினாக்கள் எழாதவாறு வினாத்தாள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வினாத்தாள் குறித்து முறையான விசாரனை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனிடம் கேட்டபோது, ‘பெரியார் பல்கலைக்கழகத்துக்கான தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், பிற பல்கலைக்கழகத்தின் மூலமாக தயாரிக்கப்பட்டதாகும்.

மூடி முத்திரையிடப்பட்டு வரும் வினாத்தாளை தேர்வுக்கு முன்னதாக பிரித்து ஆய்வுக்கு உட்படுத்துவது இயலாது. இது சம்பந்தமாக விசாரணை குழு பல்கலைக்கழகம் மூலம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில், மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x