Published : 02 May 2016 06:08 PM
Last Updated : 02 May 2016 06:08 PM

நடிகர்கள், பிரபலங்களுக்கு தனி வரிசை இல்லை: ராஜேஷ் லக்கானி தகவல்

வாக்குப்பதிவு நாளன்று நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களுக்கு தனி வரிசை கிடையாது என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "தற்போது 66 ஆயிரத்து 1 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இனி வண்ண வாக்காளர் அட்டை பெற விரும்புவோர், ஆன்லைன் மூலம், விரைவு தபாலில் பெறுவதற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இது தவிர, சென்னையில் அடையாறு, அமைந்தகரை ஆகிய இடங்களில் பெற்றுக் கொள்ள முடியும். புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களை இணையதளத்தில் தந்தை பெயர் விவரங்களை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம். அல்லது 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம். தமிழக வாக்காளர்களுக்கான ‘பூத் சிலிப்’ மே 5-ம் தேதி முதல் வீடு, வீடாக விநியோகிக்கப்படுகிறது.

தனி வரிசை இல்லை

கைபேசி எண் அளித்த வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி விவரங்கள், அடையாள அட்டை எண் மற்றும் வேட்பாளர்கள் தகவல் 3-ம் தேதி முதல் அனுப்பப்படுகிறது. வாக்குப்பதிவு நாளன்று நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களுக்கு தனி வரிசை கிடையாது. ஆண், பெண் வாக்காளர்களுக்கு தனித்தனி வரிசை அமைக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று வாக்களிக்கலாம்.

தேர்தல் விதிகளை மீறி ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம், பொருட்களை பறக்கும்படையினர், நிலையான கண்காணிப்புக் குழுவினர் மற்றும் வருமானவரி புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதுவரை வருமான வரித்துறையினர் ரூ.24 கோடி உட்பட ரூ.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x