Published : 11 Jul 2022 02:50 PM
Last Updated : 11 Jul 2022 02:50 PM

அதிமுக அலுவலகத்திற்கு சீல்: என்ன சொல்கிறது சிஆர்பிசி 145?

சென்னை: குற்றவியல் நடைமுறை சட்டம் 145-வது பிரிவின் கீழ் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்த வன்முறை காரணமாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 145-வது பிரிவின் கீழ் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்தச் சட்டம் என்ன கூறுகிறது என்று வழக்கறிஞர் சங்கர் சண்முகத்திடம் கேட்டபோது "நிலம் தொடர்பாகவும், தண்ணீர் தொடர்பாகவும், நீர்ப்பாசனம் தொடர்பாகவும் இரண்டு தரப்புகளும் இடையில் தகராறு ஏற்பட்டு பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டால் செயல் குற்றவியல் நடுவர் ஓர் உத்தரவை பிறப்பிக்கலாம்.

யார் அந்த இடத்தில் இருக்கலாம், யார் இருக்கக் கூடாது என்பது தொடர்பாக உத்தரவை செயல் குற்றவியல் நடுவர் பிறப்பிக்கலாம். ஆனால், அதிமுக பிரச்சினை என்பது உரிமையில் சட்டம் தொடர்பானது. அதுவும் ஓர் அமைப்புக்கு உள்ளே நடைபெறும் பிரச்சினை. இதில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டு இருந்தாலும், நிலம் மற்றும் நீர் தொடர்பான பிரச்சினை இல்லை. ஒரு பதவி தொடர்பான பிரச்சினை" என்று சங்கர் சண்முகம் கூறினார்.

| வாசிக்க > ‘ஒற்றைத் தலைமை’யாக இபிஎஸ்... ஓபிஎஸ்ஸுக்கு சறுக்கலா, அதிமுகவுக்கே பின்னடைவா? - ஜூலை 11 ‘சம்பவங்கள்’ |

நடந்தது என்ன?

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்திற்குச் செல்லாமல் தலைமைக் கழகத்திற்குப் சென்றார். ஓபிஎஸ் வாகனம் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் வந்தபோது ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அவரது வாகனத்தை முன்னேறவிடாமல் கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பலரும் காயமடைந்தனர். ஒருவருக்கு கையில் கத்திக்குத்து ஏற்பட்டது.

இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமைக் கழக அலுவலகத்தின் பூட்டை உடைத்து ஓபிஎஸ் உள்ளே வர வழி செய்தனர். பிரச்சார வாகனத்திலிருந்து இறங்கிய ஓபிஎஸ், ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகளை வணங்கிவிட்டு உள்ளே செல்ல அதிமுக கொடியுடன் காத்திருந்தார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமைக் கழகத்தை சுற்றிவைக்கப்பட்டிருந்த ஈபிஎஸ் பேனர்களை கிழித்தெறிந்தனர். தலைமைக் கழகத்தின் அனைத்து கதவுகளையும் அடித்து நொறுக்கினர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது.

இதன் தொடர்ச்சியாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்த வன்முறை காரணமாக, கட்சி அலுவலகத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடைக்கப்பட்ட கதவுகளை சரிசெய்து அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், அதிமுக அலுவலகத்தில் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அந்த இடத்தில் யாரும் சட்ட விரோதமாக கூடக் கூடாது. மீறினால் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x