Last Updated : 11 Jul, 2022 02:58 PM

 

Published : 11 Jul 2022 02:58 PM
Last Updated : 11 Jul 2022 02:58 PM

'கடந்த காலம் போல இல்லை; தற்போது நிர்வாகத்தில் சிரமம் உள்ளது' - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: கடந்த காலத்தில் எளிமையாக அனைத்தையும் செய்ய முடிந்தது. தற்போது நிர்வாகத்தில் சிரமம் உள்ளது என்று முதல்வர் ரங்கசாமி குறிப்பிட்டார்.

புதுவை ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக்கல்லுாரி, ஆராய்ச்சி நிறுவனத்தின் 23வது ஆண்டு பட்டமளிப்பு விழா கம்பன் கலையரங்கில் இன்று நடந்தது. விழாவுக்கு அமைச்சர் தேனீஜெயக்குமார் தலைமை வகித்தார். கல்லுாரி டீன் செழியன் வரவேற்றார். முதல்வர் ரங்கசாமி 52 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: ''கால்நடை மருத்துவக்கல்லுாரியை ரிவர் என அழைக்கின்றனர். ஆறுபோல செழிப்பை தரக்கூடிய நிறுவனமாக உள்ளது. இங்குள்ள மாணவர்கள் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் பணியாற்றி கல்லூரிக்கு பெருமை சேர்க்கின்றனர்.

கல்லுாரி தொடங்கி இதுவரை ஆயிரத்து 100 மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். இங்கு படித்த மாணவர்களில் 93 சதவீதத்தினருக்கு வேலை கிடைத்துள்ளது. 1994ம் ஆண்டு நான் விவசாயம் மற்றும் கால்நடை அமைச்சராக இருந்தபோது கல்லுாரியை தொடங்க எண்ணி டெல்லியில் அனுமதி கேட்டேன். அப்போது தமிழகத்தில் ஏற்கனவே ஒரு கால்நடை மருத்துவக்கல்லுாரி இருந்தது. மற்றொரு மருத்துவக்கல்லுாரிக்கு அனுமதி கோரியிருந்தனர்.

இதனால் டெல்லியில் பெரிய மாநிலமான தமிழகத்துக்கு 2வது கல்லுாரிக்கே இப்போதுதான் அனுமதி கேட்கின்றனர். சிறிய மாநிலமான புதுச்சேரியில் கல்லுாரிக்கு தேவையான வசதி செய்ய முடியுமா என கேட்டனர். நிலம், வசதிகளை ஒரு வாரத்தில் செய்து கொடுத்தோம். கடந்தகாலத்தில் எளிமையாக அனைத்தையும் செய்ய முடிந்தது. தற்போது நிர்வாகத்தில் சிரமம் உள்ளது. கல்லுாரி தொடங்கும்போது இயக்குநர் கிடைப்பதே கடினமாக இருந்தது.

ஆனால் இந்த கல்லுாரியில் படித்தவரே இயக்குநராக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த கல்லுாரியின் தரத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். முதுகலை பட்டம் கூடுதலாக 5 பாடப்பிரிவுகளிலும், ஆராய்ச்சி படிப்புகள் தொடங்கவும் கேட்டுள்ளனர். மருத்துவத்தில் நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பங்கள் வருகிறது. புதிய நோய்களும் வருகிறது, புதிய கண்டுபிடிப்புகளும் நடக்கிறது.

எனவே ஆராய்ச்சி அவசியமானதாக உள்ளது. இக்கல்லூரியில் 5 முதுநிலை பாடப்பிரிவுகளும், பி.எச்.டி., படிப்பும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 100 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதை 150 ஆக உயர்த்த உள்ளோம். இதற்கான கட்டிட வசதி தேவைப்படுகிறது. இதற்கு உரிய நிதி ஒதுக்கி செய்து தருவோம். கால்நடை படிப்பு மிகவும் கடினமான படிப்பு. எம்பிபிஎஸ் படிப்பை விட கடினமாக உள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர்.

படித்தவர்கள் வாயில்லா ஜீவன்களுக்கு மருத்துவம் செய்வது பெரும் புண்ணியம். இங்கு பட்டம் பெறும் மாணவர்கள் குடும்ப நிலையையும் உயர்த்துகின்றனர். இக்கல்லூரியில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான வசதிகளை அரசு செய்து தரும். கால்நடைகளுக்கு தேவையான புதிய மருந்துகளை நீங்கள் கண்டுபிடித்து தர வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

விழாவில் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் சாய்சரவணக்குமார், கென்னடி எம்எல்ஏ, பெங்களூரு தேசிய கால்நடை உணவியல் மற்றும் உடலியல் நிறுவன இயக்குனர் ராகவேந்திரபட்டா, கால்நடைத்துறை செயலர் ரவிபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் மாணவி ஐஸ்வர்ய காயத்ரி, மாணவர் ருத்ரேஸ்வரன் ஆகியோருக்கு தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x