Last Updated : 07 Jul, 2022 11:51 AM

 

Published : 07 Jul 2022 11:51 AM
Last Updated : 07 Jul 2022 11:51 AM

'காவேரி கூக்குரல்' சார்பில் 2.10 லட்சம் மரக்கன்றுகளை நட்ட விவசாயிகள்

கோவை: தேசிய வன மகோத்சவத்தை முன்னிட்டு, 'காவேரி கூக்குரல்' சார்பில் 2.10 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நடவு செய்துள்ளனர்.

ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'காவேரி கூக்குரல்' இயக்கமானது காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் ஈஷா நிறுவனர் சத்குருவால் கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தேசிய அளவில் கொண்டாடப்படும் வன மகோத்சவத்தை முன்னிட்டு, காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில் 2.10 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்கள் நடவு செய்துள்ளனர்.

இந்தியா முழுவதும் சுற்றுக்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களிடம் மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் வாரம் வன மகோத்சவமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் தமிழ்நாடு முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் இன்று (7-ம் தேதி) வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தேசிய வன மகோத்சவத்தை முன்னிட்டு கோவை, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தென்காசி 37 மாவட்டங்களில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் சுமார் 700 ஏக்கர் விவசாய நிலங்களில் 2.10 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டன.

சுற்றுக்சூழல் மேம்பாட்டுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மஞ்சள் கடம்பு, ரோஸ்வுட் போன்ற மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர். காவேரி கூக்குரல் இயக்க களப்பணியாளர்கள் விவசாயிகளின் நிலங்களுக்கு நேரடியாக சென்று மண்ணின் தன்மை, நீரின் தரம் போன்றவற்றை ஆய்வு செய்து மண்ணுக்கேற்ற மரங்களை பரிந்துரை செய்தனர். இவ்வியக்கத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இதுவரை 2.10 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டுள்ளனர். மரங்கள் விவசாயிகள் மூலம் பராமரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x