Published : 07 Jul 2022 11:21 AM
Last Updated : 07 Jul 2022 11:21 AM

’இளையராஜாவை கொச்சைப்படுத்த முயற்சிப்பது வேதனையளிக்கிறது’ - அண்ணாமலை

அண்ணாமலை

சென்னை:இளையராஜாவின் தனித்திறமையால் கிடைத்திருக்கம் ஒரு அங்கீகாரத்தைக்கூட, கொச்சைப்படுத்த முயற்சிக்கிறார்கள், இது மிகவும் வேதனையாக இருக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறியது: " அம்பேத்கர் வாழ்க்கை குறிப்பைப் பற்றிய ஒரு புத்தகம் வருகிறது. அந்த புத்தகத்திற்கு இளையராஜா ஒரு முன்னுரிமை எழுதுகிறார். அந்த முன்னுரையில், அம்பேத்கரின் வாழ்வியல் சிந்தாந்தங்களை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி செய்து கொண்டிருப்பதாக ஒரு வார்த்தையை இளையராஜா கூறினார். இந்தக் கருத்தை இந்தியா முழுவதுமே பல பெரிய மனிதர்கள் உள்பட பலதரப்பட்ட மனிதர்கள் கூறுகின்ற ஒரு கருத்து. இது புதிது கிடையாது.

இதே இளையராஜா, கோவையில் தனது பிறந்தநாள் விழாவில், நமது மாநில அரசை பற்றிக்கூட பேசியிருந்தார். மாநில அரசு நன்றாக பணி செய்வதாககூடப் பேசியிருந்தார். அது எல்லாமே அவருடைய தனிப்பட்ட கருத்தாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.

இளையராஜா முதல்வர் ஸ்டாலின் குறித்து ஒரு கருத்து கூறினார் என்றால், என்னைப் பொருத்தவரை, அது தனிப்பட்ட கருத்து. அதேபோல பிரதமர் மோடி குறித்து ஒரு கருத்து கூறினாலும் அதுவும் அவருடைய தனிப்பட்ட கருத்து. இதில் எதிலுமே அரசியல் கலக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவருடைய பார்வையை அவர் கூறுகிறார்.

தமிழகத்தில் அரசியலில் இருக்கக்கூடிய எதிர்க்கட்சி நண்பர்கள் எப்படி ஆகிவிட்டனர் என்றால், இளையராஜாவின் தனித்திறமையால் கிடைத்திருக்கக்கூடிய ஒரு அங்கீகாரத்தைக்கூட, கொச்சைப்படுத்த முயற்சிக்கிறார்கள், இது மிகவும் வேதனையாக இருக்கிறது.

சாதி, மதத்திற்குள் அடைக்கக்கூடாத ஒரு மாமனிதன் இளையராஜா. எனவே எதிர்க்கட்சியினர் இந்த வேண்டாத விமர்சனங்களை விட்டுவிட்டு இளையராஜாவை வாழ்த்த வேண்டும் என்பது எனது பணிவான கருத்து" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x