Last Updated : 26 Jun, 2022 05:00 PM

 

Published : 26 Jun 2022 05:00 PM
Last Updated : 26 Jun 2022 05:00 PM

புதுச்சேரியில் பாமக ஆட்சி அமைய வேண்டும்: பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு

புதுச்சேரி மாநில பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர்ராமதாஸ் உரையாற்றுகிறார்.

புதுச்சேரி: பெண்களிடம் பேசினால் வீட்டின் அனைத்து ஓட்டுகளும் நமக்குத்தான் நம்மால் ஆட்சி அமைக்க முடியும் என்று புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டமொன்றில் ராமதாஸ் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில பாமக பொதுக்குழு கூட்டம் கம்பன் கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. மாநில துணை அமைப்பாளர் மதியழகன் வரவேற்புரை ஆற்றினார். மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார். மாநில துணை அமைப்பாளர் வடிவேல், மாநில வன்னியர் சங்க தலைவர் ஜெயக்குமார், காரைக்கால் மாவட்ட செயலாளர் பிரபாகரன் தேவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்று பேசியதாவது, ''பாமகவினரை கட்டி இழுக்க வேண்டியதில்லை. அணிவகுத்துச் சென்றாலே போதும். இளைஞர்களை ஒன்றுதிரட்டி, அவர்களுக்கு பொறுப்புகளை கொடுத்து, குழுவாக ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டும். புதுச்சேரியில் 8, காரைக்காலில் 2 என 10 எம்எல்ஏக்களும், ஒரு எம்.பியும் வெற்றி பெற்றால் போதும். நாம் புதுச்சேரியில் ஆட்சியை பிடித்து விட முடியும்.

கடந்த காலங்களில் புதுச்சேரியின் நகரம் மற்றும் கிராமங்களின் தெரு தெருவாக, வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்துள்ளேன். ஆனாலும் நாம் ஆட்சியைப் பிடிக்கவில்லை. எனது பிரச்சாரத்தின் பயனை யாரோ அனுபவித்தார்கள். இக்கூட்ட தீர்மானங்கள் நிறைவேற பாமகவின் ஆட்சி புதுச்சேரியில் அமைய வேண்டும். அளவிட முடியாத இளைஞர்களின் சக்தியை ஒருங்கிணைத்தால் நம்மால் ஆட்சி அமைக்க முடியும். குறிப்பாக, பெண்களிடம் பேசினால் அந்த வீட்டின் அனைத்து வாக்குகளும் நமக்கு கிடைக்கும்.

தற்போது கட்சி என்றால் கொள்கை ஏதும் தேவையில்லை. ஒரு கட்சியிலிருந்து சமயம் பார்த்து அடுத்த கட்சிக்கோ, ஆட்சிக்கு வரும் கட்சிக்கோ மாறி விட வேண்டும் என்பதே கட்சியின் கொள்கையாக உள்ளது. ஆனால் பாமகவின் கொள்கை உலக நாடுகளுக்கு வழங்கும் கொள்கையாக உள்ளது. இதனை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

மதுவை விட கொடியது கஞ்சா. அதனை ஒழிக்க தீர்மானம் போட்டால் மட்டும் போதாது. கஞ்சாவை ஒழிக்க மாதம் ஒரு போராட்டத்தை பாமக முன்னெடுக்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்காக போராடத் தயங்காதீர்கள். புதுச்சேரி மாநிலத்தில் பாமக ஆட்சி அமைத்து, பாமக முதல்வர் போடும் முதல் கையெழுத்து மதுவை ஒழிப்பதே. அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, ஜிப்மரை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் தற்போது ஜிப்மர் போதிய மருந்துகளின்றி மோசமான நிலையில் உள்ளது.

மக்கள் பாமகவை வேறு மாதிரி பார்க்கிறார்கள். கொள்கையுடைய கட்சி, ஜாதி, மதம், இனம் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் பாடுபடும் ஒரே கட்சி பாமகதான். புதுச்சேரி மாநிலம் தனி அந்தஸ்து பெற்ற சிறந்த மாநிலமாக நாங்கள் உருவாக்குவோம். இதற்கு மக்களின் ஆதரவு தேவை. திரும்ப திரும்ப இரு கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிப்பதால் ஒரு பயனும் இல்லை. இதனை உணர்ந்து பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும். நாட்டில் பல கட்சிகள் இருந்தாலும் நல்ல கட்சி, நாணயமான, வெகுஜன, கொள்கையுடைய, கோட்பாடு உடைய கட்சி பாமக மட்டுமே. இதனை எண்ணி செயல்பட வேண்டும்.'' இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

முன்னதாக மாநாட்டில், புதுச்சேரியில் முழு பட்ஜெட் சமர்ப்பிக்க வேண்டும். புதுச்சேரியின் முக்கிய சாலைகளில் இருந்து மதுக்கடைகளை அகற்ற வேண்டும். சுற்றுலா என்ற பெயரில் கலாசார சீரழிவை தடுக்க வேண்டும். பணியாளர் தேர்வு வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். பாரதி, சுதேசி மில், லிங்காரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலையை மீண்டும் திறந்து, நவீனப்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும். அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். காரைக்காலில் விவசாயத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x