Published : 15 May 2016 01:52 PM
Last Updated : 15 May 2016 01:52 PM
நீலகிரி மாவட்ட பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஷுசைன் நேற்று முன்தினம் கோவை வந்தார். மேட்டுப்பாளையம் பாஜக தேர்தல் அலுவலகத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பணத்தை மட்டுமே நம்பி சட்டப்பேரவைத் தேர்தலை திமுக, அதிமுக சந்திக்கின்றன. பணத்தை இறைத்து இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், அவர்களது அரசில் ஊழல் மட்டுமே இருக்கும், வளர்ச்சி இருக்காது. தேர்தல் ஆணையம் பணப் பட்டுவாடாவைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது அவசியம்.
மத்திய அரசு, மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் அதேபோன்ற ஒரு அரசு அமைய வேண்டுமென விரும்புபவர்கள் பாஜகவையே தேர்வு செய்வார்கள் என்றார்.
ஆட்சியை பிடிக்கும்
நீலகிரி மாவட்டம் உதகை தொகுதி பாஜக வேட்பாளர் ஜே.ராமனை ஆதரித்து நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட ஷாநவாஸ் ஷுசைன் செய்தியாளர்களிடம் கூறும்போது,
‘தமிழக மேம்பாட்டுக்காக அதிமுக, திமுக போட்டியிடாமல், ஊழல் செய்யவே போட்டியிடுகின்றன.
கர்நாடக மாநிலத்தில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அதேபோல், தமிழகத்திலும் பாஜக ஆட்சியை பிடிக்கும். அதற்கு முதற்படியாக உதகை தொகுதியிலிருந்து வெற்றி தொடங்கும். தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பாஜக உள்ளது’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT