Published : 21 Jun 2022 01:34 PM
Last Updated : 21 Jun 2022 01:34 PM

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 30% நிறைவு: மேயர் பிரியா பேட்டி

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் 30% முடிந்துள்ளதாகவும், செப்டம்பருக்குள் பணிகள் முழுமையாக முடியும் என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலணியில் நடைபெற்று வரும் பணிகளை சென்னை மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு, மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மேயர் பிரியா, "சென்னையில் சிங்காரா சென்னை திட்டத்தின் கீழ் ரூ. 250 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு சிறப்பு நிதியுதவி மூலம் ரூ. 291 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை கோடம்பாக்கம் ராஜமன்னார் சாலை, ஆழ்வார்பேட்டை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம். கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை.

மழைநீர் வடிகால் பணிகளை வேகப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். தற்போது வரை 30% பணிகள் முடிவுற்றுள்ளது. செப்டம்பருக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும். ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலணியில் ரூ. 30 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, "சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.400 கோடி மதிப்பில் சாலைகள் போடப்படும் என அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அதன்படி சேதமடைந்த சாலைகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் நடைபெற்று வருகிறது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x