Published : 21 Jun 2022 07:37 AM
Last Updated : 21 Jun 2022 07:37 AM

விரைவுப் பேருந்துகளில் எம்எல்ஏ-க்களுக்கு பிரத்யேக படுக்கை ஒதுக்கீடு

சென்னை: தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்காக ஓரிரு இருக்கைகள் ஒதுக்கப்படும். அவர்கள் வராதபட்சத்தில் அந்த இருக்கைகள் மற்ற பயணிகளுக்கு ஒதுக்கப்படும்.

இந்நிலையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பிரத்யேக படுக்கை ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர், அனைத்து கிளை மேலாளர்கள், கோயம்பேடு பேருந்து நிலைய துணை மேலாளர், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள், அனைத்து பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை: சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், அவர்கள் மனைவி, துணையாளர் ஆகியோர் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் குளிர்சாதன இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் பயணம் செய்ய, அரசின் விதிமுறைகளின்படி அனுமதி வழங்கப்படுகிறது.

இதன்படி, இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட அனைத்து பேருந்துகளிலும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் படுக்கை வசதியிலும், அவரது மனைவி மற்றும் துணையாளர் இருக்கையில் அமர்ந்து பயணிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

எனவே, அனைத்து படுக்கை வசதி கொண்ட பேருந்துகளிலும் ‘7UB’ என்ற எண் கொண்ட படுக்கை ஒதுக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x