Published : 17 Jun 2022 04:30 PM
Last Updated : 17 Jun 2022 04:30 PM

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு

சென்னை: அதிமுக உட்கட்சித் தேர்தலை முறையாக நடத்தாமல், இத்தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளைக் கொண்டு நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளரான சி.பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உட்கட்சித் தேர்தலில் அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட போதிய அவகாசம் வழங்கவில்லை.

உட்கட்சித் தேர்தலுக்கு முன்பு கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் அடையாள அட்டையை புதுப்பிக்கவில்லை. அதுதொடர்பாக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, அதிமுக ஒருங்கிணைபாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான நியமனத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு ஆதரவான உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மட்டும் பங்கேற்க அழைப்பு விடுக்கபட்டுள்ளது.

எனவே, இந்தப் பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும். அதிமுக உட்கட்சி தேர்தல் அலுவலர்களான பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். மேலும், நடந்து முடிந்த உட்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x