Published : 13 May 2016 08:01 AM
Last Updated : 13 May 2016 08:01 AM

சவுகார்பேட்டையில் சுட்டுக் கொல்லப்பட்ட டிராவல்ஸ் அதிபருக்கு ஐபிஎல் சூதாட்டத்தில் தொடர்பு: தனிப்படை விசாரணையில் தகவல்

சவுகார்பேட்டையில் சுட்டுக் கொல்லப்பட்ட டிராவல்ஸ் அதிபர், ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தவர் என்றும், இது தொடர்பான கொடுக்கல் வாங்கலில் மோதல் ஏற்பட்டுதான் கொலை செய்யப்பட்டார் என்றும் தனிப்படை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை சவுகார்பேட்டை இருளப்பன் தெருவில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்திவந்த பாபுசிங் (50) என்பவர் கடந்த 3-ம் தேதி மாலை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக யானைக் கவுனி காவல் ஆய்வாளர் ரவிக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 5 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பாபுசிங்கின் கடையிலும், பக்கத்து கடைகளிலும் உள்ள கண்காணிப்பு கேமராக் களில் கொலையாளியின் உருவம் பதிவாகி யுள்ளது. அதில் ஒரு நபர் கையில் துப்பாக்கியுடன் தப்பிச் செல்லும் காட்சிகள் உள்ளன. கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள 2 பேரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள போலீஸார், அவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 ஆயி ரம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது நடந்துவரும் ஐபிஎல் கிரிக் கெட் போட்டியை வைத்து பாபுசிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதும், அதில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மோதலில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

4 நாளில் சிக்குவார்கள்

சென்னை பெருநகர காவல் ஆணையர் அசுதோஷ் சுக்லாவிடம் கேட்டபோது, ‘‘குற்றவாளி கைது செய்யப்படும் வரை உண்மையான காரணத்தை தெரிவிக்க முடியாது. ஆனால் இந்த புகார் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் இன்னும் 4 நாட்களில் கைது செய்யப்படுவார்கள்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x