Published : 09 Jun 2022 08:12 AM
Last Updated : 09 Jun 2022 08:12 AM

கரோனா காலத்தில் 511 மாணவிகளுக்கு குழந்தை திருமணம்: பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: கரோனா பரவல் காலத்தில் 511 மாணவிகளுக்கு குழந்தைத் திருமணம் நடைபெற்ற விவரம் பள்ளிக்கல்வித் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் காலத்தில் இடைநின்ற மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணிகளில் பள்ளிக்கல்வித் துறை ஈடுபட்டுள்ளது.

இதுதொடர்பாக குடியிருப்பு வாரியாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிகளில் மீண்டும் சேர்க்கப்பட்டனர். அதில் குழந்தை திருமணம் முடிந்த 511 மாணவிகளும் மீட்கப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, “இடைநின்ற மாணவர்கள் ஆய்வில் குழந்தைத் திருமணம் செய்து கொண்ட 511 மாணவிகள் கண்டறியப்பட்டனர்.

குடும்ப வறுமை காரணமாக அவர்களின் பெற்றோர், அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளனர். 12-ம் வகுப்பில் 2, 11-ம் வகுப்பில் 417, 10-ம் வகுப்பில் 45, 9-ம் வகுப்பில் 37 மாணவிகளும் குழந்தைத்திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதுதவிர 13 வயது கடந்த 8-ம் வகுப்பு மாணவிகள் 10 பேருக்கும் குழந்தைத் திருமணம் நடைபெற்றிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

அந்த மாணவிகளை மீண்டும் அழைத்து வந்து பள்ளியில் சேர்த்து தொடர்ந்து படிப்பதற்கு தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளன. மேலும், வரும் கல்வியாண்டில் குழந்தைத் திருமணம் குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுஉள்ளோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x