Published : 29 May 2016 11:49 AM
Last Updated : 29 May 2016 11:49 AM

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி குணசீலனுக்கு நான்காம் முறையாக பணி நீட்டிப்பு

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி ஏ.எம்.எஸ்.குணசீலனுக்கு நான்காம் முறையாக பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் (டிவிஏசி) பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ள குணசீலன் ம‌துரையை சேர்ந்தவர். வேளாண் பட்டப்படிப்பை முடித்த இவர், 10 ஆண்டுகள் வேளாண் துறையில் அதிகாரியாகப் பணியாற்றினார். காவல் துறையின் மீதான ஈர்ப்பின் காரணமாக 1985-ல் குரூப் -1 தேர்வெழுதி, முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்று டிஎஸ்பி ஆனார்.

கடந்த 23.5.2011-ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இணை இயக்குநராக நியமிக்கப்பட்டார். அப்போது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தினமும் ஆஜராவார். உள்ளூர் நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் கூட கடைநிலை காவல்துறையினர் ஆஜராகாத நிலையில், பெரிய பொறுப்பில் இருந்த குணசீலன் ஆஜரானது ஆச்சர்யத்தை அளித்தது.

இந்நிலையில் கடந்த 31.5.2013 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு மீண்டும் ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கின் சிறப்பு பணி அதிகாரியாக நியமிக்கப்பட்ட குணசீலன் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்,கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற‌த் தில் நடைபெறும் விசாரணையை கூர்ந்து கவனிப்பார்.

நீதிமன்றத்தின் அன்றாட நடவடிக்கைகளையும், வழக்கின் போக்கையும் துல்லியமாக கணித்து மேலிடத்துக்கு தகவல் அளிப்பார். தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் மேல்முறையீட்டு வழக்கிலும் நாள்தோறும் ஆஜராகி, அனைத்து தரப்பினரின் நடவடிக்கைகளையும் கவனித்து வருகிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் அனுபவம் வாய்ந்த குணசீலனின் அறிவுரையின்படியே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நடந்துகொள்கிற‌து.

சென்னை, பெங்களூரு, டெல்லி என இவ்வழ‌க்கில் சிறப்பாக செயல்பட்டு வருவ‌தால் குணசீலனுக்கு தொடர்ந்து மூன்று முறை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இவரது பணிக்காலம் வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், குணசீலனுக்கு தொடர்ந்து 4-வது முறையாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் சொத்துக்குவிப்பு வழக்கின் சிறப்பு பணி அதிகாரியாக குணசீலன் 31-5-2017 வரை (ஓராண்டு) செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஜி ரேங்கில் உள்ள அதிகாரிகளுக்கு அரிதாக பணி நீட்டிப்பு வழங்கப்படும் நிலையில், குணசீலனுக்கு நான்காவது முறையாக பணி நீட்டிக்கப்பட்டது ஆச்சர்யத்தை அளித்துள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x