Published : 28 May 2016 10:33 AM
Last Updated : 28 May 2016 10:33 AM

உதகை மலர் கண்காட்சியில் 1.30 லட்சம் மலர்களால் உருவாக்கிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்: சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது

உதகை மலர் கண்காட்சியில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் மலர்களால் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ‘சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய மாதிரி’ சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது.

கோடை சீசனையொட்டி நீலகிரி மாவட்ட நிர்வாகம், சுற்றுலா மற்றும் தோட்டக்கலைத் துறைகள் சார்பில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்படுகிறது. இதில் ரோஜா, மலர் மற்றும் பழக் கண்காட்சிகள் இடம்பெறும். உள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.

இந்த ஆண்டுக்கான 120-வது மலர்க் கண்காட்சி, உதகை தாவரவியல் பூங்காவில் நேற்று தொடங்கியது. வேளாண் துறை அமைச்சர் ரா.துரைக்கண்ணு தொடங்கி வைத்தார். தோட்டக்கலைத் துறை இயக்குநர் எல்.சித்ரசேனன் வரவேற்றார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் தலைமை வகித்தார்.

21 ஆயிரம் மலர்த் தொட்டிகள்

மலர் கண்காட்சிக்காக, 100 ரகங்களில் 3 லட்சம் மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக 15 ஆயிரம் தொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஈக்குபனா மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல்

இந்த ஆண்டின் சிறப்பம்சமாக, ஒரு லட்சத்து 30 ஆயிரம் பல வண்ண ரோஜா மற்றும் கார்னேசன் மலர்களால் 68 அடி நீளம், 10 அடி அகலம் 30 அடி உயரம் கொண்ட ‘சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய மாதிரி’ வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 7,500 பல வண்ண கார்னேசன் மலர்களால் 10 அடி நீளம், 4 அடி அகலம், 6 அடி உயரம் கொண்ட சிட்டுக்குருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு மலர்களின் அணிவகுப்பு, நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் கொய்மலர் அலங்காரம், அரிய வகை மலர்ச் செடிகளின் தொகுப்பு, 5 முகப்பு மலர் அலங்கார வளைவுகள், ஆர்கிட்ஸ் மலர்களால் ஆன 5 அலங்கார வளைவுகள் மற்றும் பல்வேறு மலர்களின் அலங்காரங்கள், டூலிப்ஸ் மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x