Published : 11 May 2016 09:22 AM
Last Updated : 11 May 2016 09:22 AM
முதல்வர் என்று கூறி சுற்றுபவர்கள் தேர்தலுக்குப் பின் காணாமல் போவார்கள் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்ட த்தில் செய்யாறு தவிர மற்ற 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை பிரச்சாரம் செய்தார்.
கீழ்பென்னாத்தூரில் அவர் பேசும்போது, “தேர்தல் நேரத்தில் மட்டும் இல்லை, எந்த நேரத்திலும் மக்களை சந்திக்கக் கூடியவர்கள் நாங்கள். தமிழகத்தில் எத்தனை தலைவர்கள் உள்ளார்களோ, அவர்கள் எல்லோரும் நான்தான் அடுத்த முதல்வர் எனக்கூறி சுற்றித் திரிகிறார்கள். அவர்கள், அனைவரும் தேர்தலுக்குப் பிறகு காணாமல் போய்விடுவார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் மேல்சோழன்குப்பத்தில் 4 வயது சிறுவனுக்கு மது ஊற்றிக் கொடுத்த கொடுமை வாட்ஸ் அப்பில் வெளியானது. அப்போதும் சசிபெருமாள் இறந்தபோதும் மதுவுக்கு எதிராக போராடியவர்களை அடித்து உதைத்தபோதும் மதுவிலக்கு பற்றி அறிவிக்காத ஜெயலலிதா, தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று பொய்யான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் வரும்போதுதான் அவருக்கு மக்களின் நினைவு வருகிறது. ‘மக்களால் நான், மக்களுக்காக நான்’ என்று புலம்பி வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே, பூரண மதுவிலக்குதான் என்று கருணாநிதி அறிவித்துள்ளார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT