Last Updated : 11 May, 2022 06:40 AM

 

Published : 11 May 2022 06:40 AM
Last Updated : 11 May 2022 06:40 AM

வெளிமாநில ‘மா’ மூலம் இயங்கும் கிருஷ்ணகிரி மாங்கூழ் ஆலைகள்: இடைப்பருவ சாகுபடியை தடை செய்ய வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மாங்கூழ் தயாரிக்கும் பணிகள் தொடங்கியது.

கிருஷ்ணகிரி: உள்ளூரில் விளைச்சல் பாதிக்கப் பட்டுள்ளதால், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்துமா கொள்முதல் செய்யப்பட்டு, கிருஷ்ணகிரியில் மாங்கூழ் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 45 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. தோத்தபுரி எனப்படும் பெங்களூரா, அல்போன்சா ரகத்தில் இருந்து மாங்கூழ் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நிகழாண்டில் உள்ளூரில் மா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், வெளிமாநிலங்களில் இருந்து மாம்பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டு மாங்கூழ் அரவை தொடங்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம் மாங்கூழ் உற்பத்தியாளர்கள் சங்க பொது செயலாளர் பையூர் மாதவன் கூறும்போது, மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் 4.5 லட்சம் டன் மாங்காய்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதன்மூலம் 2 லட்சம் டன் மாங்கூழ்தயாரிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு அந்நிய செலாவணியாக கோடி கணக்கில் வருவாய் கிடைக்கிறது. 'மா' வாழ்வாதாரமாக கொண்டுவிவசாயிகள், மாங்கூழ் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள், கூலித் தொழிலாளர்கள் என நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் பேர் சார்ந்து உள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாக மா விளைச்சல் படிப்படியாக குறைந்துவருகிறது. இதனால் மாங்கூழ் தயாரிக்கும் பணியும் பாதிக்கப்படுகிறது. நிகழாண்டில் உள்ளூரில் மா உற்பத்தி பாதிப்பு காரணமாக 50 ஆயிரம் டன் மாங்காய்கள் கூட அரவைக்கு கிடைக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து மா இறக்குமதி செய்து. மாவட்டத்தில் உள்ள 21 தொழிற்சாலைகளில் மாங்கூழ் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சீசன் காலத்தில் மாவிளைச்சல் பாதிக்கப் படுவதற்கு, இடைப்பருவம் மா சாகுபடி முக்கிய காரணமாக உள்ளது. இடைப்பருவ மா விளைச்சலில் அதிக வருவாய் கிடைப்பதால், விவசாயிகள் மாமரங்களுக்கு வீரியமான பூச்சி மருந்துகள் தெளிக்கின்றனர். இதனால் சீசன் காலங்களில் பூச்சிதாக்குதல் அதிகரித்து,விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மாங்கூழ் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, மா விவசாயிகள், தொழிலாளர்கள், மாங்கூழ் உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என 2 லட்சம் பேர் பாதிக்கப்படுவதுடன், படிப்படியாக வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இடைப்பருவ மாவிளைச்சலை விவசாயிகள் கைவிட வேண்டும். அரசும் தடை செய்ய வேண்டும்.

வட்டியில்லா கடன்கள்

நிகழாண்டில் மாவட்டத்தில் மாவிளைச்சல் பாதிப்பால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மா சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

மாங்கூழ் தயாரிக்கும் நிறுவனங்கள் 12 மாதங்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. தொழிற்சாலைகள் இயங்கும் 3 மாதங்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும்.

வட்டியில்லா கடன்கள் வழங்க வேண்டும். மாங்கூழுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். மாவிவசாயத்தை காக்க மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x