Last Updated : 20 May, 2016 12:50 PM

 

Published : 20 May 2016 12:50 PM
Last Updated : 20 May 2016 12:50 PM

பிளஸ் 2 மாவட்ட சிறப்பிடம்: கல்லூரி சேர உதவி நாடும் புளிதட்டும் தொழிலாளி மகன்

பிளஸ் 2 தேர்வில் 1,166 மதிப் பெண்கள் எடுத்து, மாவட்ட அளவில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2-ம் இடம் பிடித்த புளிதட்டும் தொழிலாளியின் மகன் கல்லூரியில் சேர பணம் இல்லாததால், தானும் புளி தட்டும் வேலைக்குச் சென்றுள்ளதோடு, தன்னார்வலர்களின் உதவியை எதிர்பார்த்துள்ளார்.

தேனி பாரஸ்ட் ரோடு விசு நாததாஸ் காலனி 2-வது தெ ருவைச் சேர்ந்த சங்கரமூர்த்தி மகன் மாரிச்சாமி (17). இவர் தேனி நாடார் உறவின்முறைக்குச் சொந்தமான அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்தார். பொதுத்தேர்வில் 1,166 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2-ம் இடம் பிடித்துள்ளார். பாட வாரியாக அவர் எடுத்துள்ள மதிப்பெண்கள்: தமிழ்- 190, ஆங்கிலம்- 179, கணினி அறிவியல்- 198, பொருளாதாரம்- 200, கணக்குபதிவியல்- 200, வணிகவியல்- 199.

ஆனால், கல்லூரியில் சேர பணம் இல்லாததால் தனது தாயாருடன் சேர்ந்து புளி தட்டும் வேலைக்கு செல்லத் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் மாணவர் எஸ். மாரிச்சாமி கூறியதாவது: பழைய இரும்பு வியாபாரியான எனது தந்தை மதுப்பழக்கத்தால் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டார். எனது தாயார் மகேஸ்வரி புளி தட்டும் வேலை செய்து அதில் கிடைக்கும் சொற்ப வருவாயில் எங்களை காப்பாற்றி வருகிறார். தற்போது 10-க்கு 10-அடியில் தகரத்தால் வேயப்பட்ட குடிசையில் ரூ. 25 ஆயிரம் ஒத்திக்கு தங்கி உள்ளோம்.

நான் தனிப்பயிற்சிக்கு செல்லாமல் தினமும் பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லித் தரும் பாடங்களைக் குறிப்பெடுத்து வந்து மாலை 6 மணி வரை படிப்பேன். அதற்கு பின்னர் இரவு 9 மணி வரை புளிதட்டும் வேலை செய்வேன். மறுநாள் காலை 4.30 மணிக்கு எழுந்து பாடங்களை படிப்பேன்.

6-ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை எனக்கு நோட்டு, புத்தகம், உடைகள் என அனைத்து உதவிகளையும் எனது பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், பள்ளி நிர்வாகம் செய்ததால் என்னால் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடிந்தது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். ஆடிட்டர் ஆவதுதான் எனது லட்சியம். அதற்காக கல்லூரியில் சேர்ந்து பி.காம்., சிஏ படிக்க பணம் இல்லாததால் தற்போது புளிதட்டும் வேலைக்குச் செல்கிறேன்.

எனது படிப்புக்கு யாராவது உதவி செய்தால் எனது லட்சியம் நிறைவேறும். நான் படித்து முடித்து வேலைக்கு சென்று பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவேன். என்னைப் போன்ற ஏழை மாணவர்களுக்கும் நிச்சயம் உதவுவேன் என்றார்.

பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஏ. ஜெயராஜ் கூறியதாவது: மாரிச்சாமி மிகவும் ஏழ்மையான சூழலில் வளர்ந்தாலும் ஒழுக்கமானவராக இருந்தார். பிளஸ் 2 தேர்வில் 1166 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இரண்டு மதிப்பெண்கள் கூடுதலாக எடுத்திருந்தால் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றிருப்பார். அ வருக்கு அரசின் அனைத்து உதவிகளும் கிடைத்திருக்கும் என்றார்.

மாரிச்சாமியின் தாயார் மகேஸ்வரி கூறும்போது, எனது மூத்த மகன் பொன்கார்த்தி, இளையவன் மாரிச்சாமி. இருவரையும் படிக்க வைக்க வருமானம் இல்லாததால், பொன்கார்த்திக், தனது தம்பியின் படிப்புக்காக டூவீலர் ஒர்க்சாப்பில் வேலை செய்கிறான்.

தினமும் 10 கிலோ புளியைத் தட்டி, கொட்டைகளை பிரித்து தரமான புளியாகக் கொடுத்தால் ரூ. 80 கிடைக்கும். அதற்கு குறைந்தபட்சம் 7 மணி நேரம் ஆகும். எனது மகனின் படிப்புக்கு யாராவது உதவினால் நன்றாக இருக்கும் என்றார். மாரிச்சாமியை தொடர்பு கொள்ள அலைபேசி எண்: 9600618192.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x