Published : 03 May 2022 03:23 PM
Last Updated : 03 May 2022 03:23 PM

கள்ளக்குறிச்சி | மயானம், நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சியில் மயானம் மற்றும் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஜெயவேல் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்குதாங்கல் கிராமத்தில் 0.26 ஹெக்டேர் மயான புறம்போக்காக வகைபடுத்தபட்டுள்ள ஒரு பகுதியை கிராம மக்கள் சிலர் ஆக்கிரமித்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மயான புறம்போக்கு நிலத்தில் தார் சாலை அமைக்க முயற்சி செய்து வருகின்றனர். இதனால், மயானத்தின் பரப்பளவு குறைந்து, சடலத்தை புதைக்க கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.

அதேபோல, 2.13. ஹெக்டேர் பரப்பளவுள்ள குளம் என வகைப்படுத்தப்பட்டுள்ள நீர்நிலையை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதால், மழைக்காலத்தில் நீர்நிலைகளில் நீர் தேங்காமல், மழைநீர் வீணாகிறது. இதுதொடர்பாக, செயல் அலுவலரிடம் கேள்வி எழுப்பியபோது, சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டதால் வேறு இடத்தைத் தேட முடியாது. எனவே தார் சாலை அமைக்க முடிவு செய்துள்ளாதாக பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மனு மீது நடவடிக்கை எடுக்கவும், நீர்நிலை மற்றும் மயான புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x