Published : 12 May 2016 09:02 AM
Last Updated : 12 May 2016 09:02 AM

அம்பத்தூர் காங். வேட்பாளர் கார் மீது ஆசிட் வீச்சு: திமுக-காங்கிரஸ் தொண்டர்கள் சாலை மறியல்

அம்பத்தூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் அசன்மவுலானா (33) போட்டியிடுகிறார். முன்னாள் எம்.பி. ஆரூணின் மகனான இவர், நேற்று வாக்கு சேகரிப்பதற்காக அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ள அத்திப்பட்டு நோக்கி தொண்டர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை 3-வது நிழற்சாலை சந்திப்பு வழியே செல்லும்போது, தாம்பரம்-புழல் பைபாஸ் சாலை மேம்பாலத்தில் நின்ற மர்ம நபர்கள், ஆசிட் நிரப்பிய பாட்டில்கள் மற்றும் முட்டைகளை அசன்மவுலானா கார் மீது வீசினர். இதையறிந்த அவர் காரை நிறுத்தி கீழே இறங்கினார்.

அப்போது, ஆசிட் அவரது கைகளில் பட்டது. இதில், படுகாயமடைந்த அவர், ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். தகவலறிந்த திமுக-காங்கிரஸ் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

ஆசிட் வீச்சுக்கு காரணம் அதிமுக வேட்பாளர்தான், அவரை கைது செய்யவேண்டும் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் உயரதிகாரிகள், ஆசிட் வீசிய மர்ம நபர்களை கைது செய்வதாக உறுதியளித்த பிறகு மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x