Published : 12 May 2016 02:42 PM
Last Updated : 12 May 2016 02:42 PM
தமிழகத்தில் தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளை திறந்தது தான் அதிமுக வின் சாதனை என பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ் சாட்டினார்.
திருவண்ணாமலை தொகுதி தேமுதிக வேட்பாளர் மணி கண்டனை ஆதரித்து அக்கட்சியின் மாநில மகளிரணித் தலைவி பிரேமலதா விஜயகாந்த் நேற்று மாலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘திருவண்ணாமலையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எ.வ.வேலு கடந்த தேர்தலின்போது ‘டான்காப்’ ஆலை திறக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் கொடுத்தார். ஆனால், எதையும் அவர் நிறைவேற்றவில்லை. எ.வ.வேலு என்றால் எதையும் நிறைவேற்றாத வேட்பாளர் என்றுதான் அர்த்தம்.
அதிமுக ஆட்சியில் பொது மக்களின் அடிப்படை பிரச் சினைகளை தீர்க்கவில்லை. சாலை வசதி இல்லை. தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. ஆனால், தமிழகத்தில் தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடையை திறந்ததுதான் அதிமுகவின் சாதனை. அதிமுக, திமுக ஆட்சியில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள்தான் வளர்ந்தார்கள். மக்களுக்கு எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை.
தமிழ்நாட்டில் ஒரு கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். தமிழகத்தில் 2-ம் இடத்தில் இருந்த வேளாண் துறை இன்று 20-வது இடத்துக்கு சென்றுவிட்டது. தொழில் துறையில் 21-வது இடம். பொருளாதாரத்தில் 20-வது இடம்.
அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்நோக்கிச் சென்றுவிட்டதாக ஸ்டாலின் பேசுகிறார். அவரது தந்தை 3 முறை முதல்வராக இருந்துள்ளார். இதன்மூலம் அவரது தந்தையின் ஆட்சிக் காலத்தில் தமிழகம் பின்நோக்கிச் சென்றதை ஒப்புக் கொள்கிறார்.
தேமுதிகவின் பாதி தேர்தல் அறிக்கையை அதிமுக காப்பி யடித்து வெளியிட்டுள்ளது. மக்கள் நலக் கூட்டணியில் உள்ள 6 தலைவர்கள் மீது எந்த ஊழல், கிரிமினல் குற்றச்சாட்டும் இல்லை. தமிழ்நாட்டில் உருவான நல்ல கூட்டணி மக்கள் நலக் கூட்டணிதான்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT