Last Updated : 29 May, 2016 05:04 PM

 

Published : 29 May 2016 05:04 PM
Last Updated : 29 May 2016 05:04 PM

பதவியேற்கும் முன்பாகவே புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் கிரண்பேடி ஆலோசனை

பதவியேற்புக்கு முன்பாகவே புதுவை தலைமைச் செயலகத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி மாநில அரசு செயல்பாடுகள் தொடர்பாக நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், ஐஜி உள்பட அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர். சட்டம் ஒழுங்கு உட்பட முக்கிய விவரங்களை கேட்டறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுச்சேரியின் புதிய துணை நிலை ஆளுநராக இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பேடியை மத்திய அரசு நியமித்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் சனிக்கிழமை இரவு புதுச்சேரி ஆளுநர் மாளிக்கைக்கு வந்தார். அவருக்கு முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள நாராயணசாமி, தலைமை செயலர் மனோஜ் பரிதா, ஐஜி பிரவீர் ரஞ்சன் ஆகியோர் வரவேற்பு அளித்து, வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று பதவியேற்புக்கு முன்னரே கிரண்பேடி தலைமைச் செயலகத்தில் அரசுத்துறை செயலர்கள், இயக்குனர்களின் ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். இதில் தலைமைச் செயலர் மனோஜ் பரிதா மற்றும் அரசு செயலர்கள், ஜஜி பிரவீர் ரஞ்சன், துறைகளின் இயக்குனர்கள், தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடர்பாக விசாரித்தபோது, பல்வேறு அரசு துறைகள், அவற்றின் செயல்பாடுகள், காவல்துறையின் செயல்பாடுகள், சட்டம் ஒழுங்கு நிலைமை உட்பட முக்கிய விவரங்கள் அனைத்தையும் கிரண்பேடி கேட்டறிந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்பே தொடக்கம்

பதவியேற்று மாலையில் நடக்கும் நிலையில் அதற்கு முன்பாக தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்ட இயலுமா என்ற சர்ச்சையும் எழுந்தது.சட்ட வழிமுறைப்படி தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்த பிறகே தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்ட இயலும். இது மிகவும் தவறானது" என்று ஒரு தரப்பினர் குறிப்பிட்டனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "யூனியன் பிரதேசத்தை பொருத்தவரை ஆளுநரை குடியரசுத்தலைவர் நியமிக்கிறார். அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்துக்கு வந்து துறைகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், செயல்பாடுகளை விளக்கக்கோரி கேட்டார். அதில் தவறில்லை. பதவியேற்புக்குப் பின்னர் துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதற்கு வசதியாக அனைத்தும் கேட்டு அறிந்துள்ளார்" என்று குறிப்பிட்டனர்.

தலைமைச்செயலர் மனோஜ் பரிதா இதுதொடர்பாக கூறுகையில், "அதிகாரிகளை ஆளுநர் சந்தித்தார். இது ஆய்வுக்கூட்டமல்ல" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x