Published : 09 May 2016 12:55 PM
Last Updated : 09 May 2016 12:55 PM

யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடத்திய ஜெயலலிதா மக்களை மறந்து விட்டார்: இளங்கோவன் குற்றச்சாட்டு

யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடத்திய ஜெயலலிதா மக்களை மறந்துவிட்டார் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் குற்றம்சாட்டினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் சோளிங்கர் தொகுதியில் முனிரத்தினம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் நேற்று மாலை தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, “கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் மீது ஜெயலலிதா அக்கறை காட்டவில்லை. யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடத்திய ஜெயலலிதா மக்களை மறந்து விட்டார். கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழை வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீது எந்த அக்கறையும் அவர் காட்டவில்லை.

தேர்தல் நேரத்தில் மட்டும் எம்ஜிஆரின் வெற்றிச் சின்னம் என்று பிரச்சாரம் செய்யும் ஜெயலலிதாவுக்கு தேர்தல் நேரத்தில் மட்டும் எம்ஜிஆர் மீது அக்கறை வருவது ஏன்? தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களுக்கு எம்ஜிஆர் பெயரை வைக்காதது ஏன்? பொதுமக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

தமிழகம் வளர்ச்சி பெற வேண்டுமென்றால் திமுக ஆட்சி அமைக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த ஊழல் ஆட்சியை இந்த தேர்தலில் மக்கள் தூக்கி எறிய வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x