Published : 22 Apr 2022 01:47 PM
Last Updated : 22 Apr 2022 01:47 PM

ஆண்டுக்கு 6 கிராமசபை கூட்டம்: அரசு அறிவிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

கோப்புப் படம்

சென்னை: உள்ளாட்சி தினமாக இருந்த நவம்பர் 1 மற்றும் தண்ணீர் தினமான மார்ச் 22 என ஆண்டுக்கு 6 கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் வரவேற்றுள்ளது.

இதுகுறித்து இன்று அக்கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "நடைமுறையில் இருக்கும் 4 கிராம சபை கூட்டங்களோடு சேர்த்து முன்னர் உள்ளாட்சி தினமாக இருந்த நவம்பர் 1 மற்றும் தண்ணீர் தினமான மார்ச் 22 என ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் மனதார வரவேற்கிறது. கிராம சபைக்கு தொடர்ந்து உழைத்து வரும் மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்த வெற்றி இது.

அதோடு 600 ஊராட்சிகளில் கிராம செயலகங்கள் கட்டப்படும், சிறப்பாக செயல்படக்கூடிய கிராமங்களை கண்டறிந்து, மாவட்டத்திற்கு ஒன்று என மொத்தம் 37 கிராம ஊராட்சிகளுக்கு 10 லட்சம் பரிசுத் தொகையுடன் ஆண்டுதோறும் ‘‘உத்தமர் காந்தி’’ விருது, அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் வாகனம், ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வு படித்தொகை 5 மடங்காக உயர்த்தித் தரப்படும் ஆகிய அறிவிப்புகள் கிராம ஊராட்சிகளுக்கு வலு சேர்த்து மக்களுக்கான சேவைகளை அதிகரிக்கச் செய்யும். சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் அறிவித்துள்ள இந்த அம்சங்கள் நிதிப்பற்றாக்குறை ஏதுமின்றி முழுமையாக செயல்வடிவம் பெறவேண்டும் என மநீம விழைகிறது.

அதேசமயம் கிராம ஊராட்சிகள் வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டும் என்றும், கிராம சபைத் தீர்மானங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், அவை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.
கிராம ஊராட்சிகளுக்கு அமர்வு படியை அதிகரித்திருப்பது அவசியம் என்பது போல், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கும் தலைவர்களுக்கும் மாத ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்றும் கருதுகிறது. இதேபோல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளாக செயல்படும் நகராட்சி, பேரூராட்சி
மற்றும் மாநகராட்சி உறுப்பினர்களுக்கும், தலைவர்கள், துணைத் தலைவர்கள், மேயர்கள் மற்றும் துணை மேயர்களுக்கும் சம்பள நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறது.

தென்னிந்திய மாநிலங்களில் செயல்படும் நகர்ப்புற அமைப்புகளில் தமிழகத்தில் மட்டுமே மாத ஊதியம் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது, உள்ளாட்சி அமைப்புகளுக்கென தனி இணை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற மநீம-வின் கோரிக்கையையும் இந்த அரசு நிறைவேற்ற வேண்டும்.

கிராமசபை கூட்டங்களில் மக்கள் அதிக அளவில் பங்கேற்பதோடு, உங்கள் உள்ளாட்சிகள் குறித்த கேள்விகளை தொடர்ச்சியாக எழுப்ப வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் விரும்புகிறது. உள்ளாட்சி அமைப்புகளை தொடர்ச்சியாக வலுப்படுத்த மக்கள் நீதி மய்யம் என்றும் துணை நிற்கும்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x