Published : 19 Apr 2022 04:49 PM
Last Updated : 19 Apr 2022 04:49 PM

ஆளுநர் கார் மீதான கல்வீச்சு தாக்குதலுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும்: அண்ணாமலை

சென்னை: "மயிலாடுதுறையில் ஆளுநர் கார் மீது கற்கள், கருப்புக் கொடி வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்குப் பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "மயிலாடுதுறையில் இன்று ஆளுநர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அங்கிருக்கக்கூடிய திமுக தொண்டர்கள் தன்னிச்சையாக நடத்திய தாக்குதல் கிடையாது; 3 நாட்களாக திமுக தலைவர்கள் கொடுத்த ஊக்கத்தினாலும், ஊக்குவிப்பாலும் தொண்டர்களால் நடத்தியிருக்கக் கூடிய தாக்குதல்.

எனவே, ஆளுநரிடம் தமிழக முதல்வர் மன்னிப்புக் கேட்க வேண்டும். அல்லது பதவி விலக வேண்டும். இரண்டே வாய்ப்புகள்தான் உள்ளன. ஒரு நாட்டின் மிக முக்கியப் பொறுப்பில் இருக்கக்கூடிய ஆளுநருக்கே முதல்வர் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்று சொன்னால், அன்றைக்கு முதல்வர் மீது பொதுமக்கள் வைத்திருக்கக் கூடிய நம்பிக்கையை இழந்து விடுகின்றார்.

முன்னதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறையில் தருமபுர ஆதினத்தை சந்தித்துவிட்டு திரும்பும் வழியில், மன்னம்பந்தல் என்ற இடத்தில் ஆளுநரின் கார் மீது கற்கள், கருப்புக் கொடி வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்துக்கு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x