Published : 02 Apr 2016 09:51 AM
Last Updated : 02 Apr 2016 09:51 AM
சென்னை தலைமைச் செயலகம் அருகே சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவர் மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பெண்கள், நடத்துநர் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.
சென்னை கண்ணகி நகரில் இருந்து தடம் எண் ‘102 கே’ பஸ் பிராட்வே நோக்கி நேற்று காலை 10.15 மணி அளவில் சென்று கொண்டிருந்து. சுந்தரராஜ் (37) என்பவர் பஸ்ஸை ஓட்டிச் சென்றார். நடத்துநராக சதீஷ்குமார் (37) இருந்தார். தலைமைச் செயலகம் தாண்டி ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் வலது புறம் இருந்த தடுப்புச் சுவரில் பலமாக மோதியபடி சென்றது.
இதனால் பஸ்ஸுக்குள் இருந்த பயணிகள் அனைவரும் அலறினர். தடுப்புச் சுவரை இடித்து கீழே தள்ளிய பஸ் சுரங்கப்பாதை இறங்கும் இடத்தில் சென்று நின்றது. பஸ்ஸில் பெண்கள் அமரும் இடது பகுதி முழுவதும் இருந்த ஜன்னல் கண்ணாடிகள், இரும்புக் கம்பிகள் உடைந்து விழுந்தன. இந்த விபத்தில் பஸ்ஸில் இருந்த 4 பெண்கள், நடத்துநர் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. காயமடைந்தவர்களுக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் வீட்டுக்கு சென்றனர்.
இந்த விபத்து தொடர்பாக யானைக்கவுனி போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், ஓட்டுநர் சுந்தரராஜ் பஸ்ஸை வேகமாக ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கிறது என்பது தெரியவந்தது.
சுரங்கப் பாதையில் பஸ் கவிழ்ந்து இருந்தால் விபத்து மோசமானதாக இருந்திருக்கும். அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.
விபத்தில் காயமடைந்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களைப் பார்வையிடும் மருத்துவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT